வேதாரண்யத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. உப்பு உற்பத்தியில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் பத்தாயிரம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெறுகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை உப்பு உற்பத்தி நடைபெறும். இங்கு வழக்கமாக 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யபடுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா கேரளா உள்ளிட்டபல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கத்தில் இருந்து தற்போது வரை விட்டு விட்டு மழை பெய்து வருவதால் உற்பத்தி பாதிக்கப்பட்டது. பின்னர் வெயில் தாக்கம் சற்று அதிகரித்ததால் உப்பு உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்த நிலையில் வேதாரண்யம் பகுதியில் மழை பெய்தது. உப்பள பகுதியான கோடிக்காடு, அகஸ்தியன்பள்ளி, கடிநெல்வயல் பகுதியில் விட்டு விட்டு மழை பெய்தது.
இதனால் உப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது பாத்திகளில் உள்ள உப்பை சேகரித்து தார்பாய்களை மற்றும் பனைமட்டைகளை கொண்டு மூடும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மீண்டும் உப்பு உற்பத்தி தொடங்குவதற்கு ஒரு வார காலம் ஆகும் எனவும், மீண்டும் அடிக்கடி மழை பெய்தால் இந்த ஆண்டு உப்பு உற்பத்தி இலக்கை எட்ட முடியாது எனவும் இதனால் உப்பு விலை ஏறுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.








