ரூ.5 கோடி மதிப்பில் மிதக்கும் உணவக கப்பல் அமைக்கும் பணி: அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் ஆய்வு!

முட்டுக்காடு தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக படகு குழாம் வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் இரண்டு அடுக்கு மிதக்கும் உணவக கப்பலின் கட்டுமான பணியை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆய்வு செய்தார். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில்…

முட்டுக்காடு தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக படகு குழாம் வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் இரண்டு அடுக்கு மிதக்கும் உணவக கப்பலின் கட்டுமான பணியை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக படகு குழாம் வளாகத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்டமான இரண்டு அடுக்கு மிதக்கும் உணவக கப்பலின் கட்டுமான பணி அமைக்கப்பட்டு வருகிறது. 125 அடி நீளம், 25 அடி அகலம் கொண்டதாக உருவாக்கப்பட்டு வரும் இந்த மிதவை உணவகக் கப்பலின் தரைத்தளம் முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் அமைக்கப்பட உள்ளது.

முதல் தளம் திறந்தவெளி தளமாகவும், சுற்றுலா பயணிகள் அதில் அமர்ந்து உணவு உண்டு பயணிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுமானப் பணியை தமிழ்நாடு சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் பார்வையிட்டார்.

தொடர்ந்து ஆய்வுக்குப் பிறகு செய்தியாளா்களிடம் பேசிய அமைச்சர் ராமச்சந்திரன் கூறியதாவது:

”முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டை அனைத்து துறைகளிலும் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக உருவாக்கி வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் முன்னேற்றத்தில் தமிழ்நாடு என்ஜினாக உள்ளது என்று பாராட்டியுள்ளார். தமிழ்நாடு சுற்றுலாத் துறையில் முதன்மை மாநிலமாக விளங்குகிறது.

இந்த மிதவை உணவக கப்பல் பணிகள் முடிவடைந்தவுடன் அதிக சுற்றுலாப் பயணிகள் வரும் வாய்ப்பு உருவாகியுள்ளது. தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக இத்தகைய மிதவை உணவகக் கப்பல் அமைக்கப்பட்டு வருகிறது. இதேபோல், கோவை வாலங்குளம், ஊட்டி உள்பட 4 இடங்களில் மிதக்கும் உணவக கப்பல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.