மக்களவைக்கு குந்தகம் விளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, காங்கிரஸ் மக்களவைக் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்திற்கு வந்து மணிப்பூர் பிரச்சனை குறித்து பேச வேண்டும் என இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனால் இரு வாரங்களாக அவை அமளியால் முடங்கியது. இதைத்தொடர்ந்து, ‘இந்தியா’ கூட்டணி எம்.பிக்கள் சார்பாக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. மத்திய பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது 3வது நாளாக இன்றும் விவாதம் நடைபெற்றது.
இன்று லோக்சபாவில் காங்கிரஸ் மக்களவைக் குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசினார். அப்போது, நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று பிரதமரை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்து சேர்த்துள்ளது. பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வந்து மணிப்பூர் பிரச்சனை குறித்து பேச வேண்டும் என்று தான் நாங்கள் கோரிக்கை விடுத்தோம். நாங்கள் எந்த பாஜக உறுப்பினரையும் அவைக்கு வரச் சொல்லவில்லை. பிரதமர் மோடி வரவேண்டும் என்றே கூறினோம்” எனத் தெரிவித்தார்.
மேலும், பிரதமர் மோடியை திருதிராஷ்டிரனுடன் ஒப்பிட்டு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசினார். மன்னன் திருதராஷ்டிரன் குருடனாக அமர்ந்திருந்த போது, திரௌபதியின் ஆடைகள் பறிக்கப்பட்டன. அதே போல் இன்று நம் அரசனும் குருடனாக அமர்ந்திருக்கிறார் என ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசிய கருத்துக்கு மத்திய அமைச்சர்கள், பாஜக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் லோக்சபாவில் கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தொடர்ந்து பேச அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், லோக்சபாவில் இருந்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதனை அடுத்து பிரதமர் மோடி சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேல் பதிலுரை ஆற்றிய நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துவிட்டதால் தீர்மானத்திற்கு எதிராக குரல் எழவில்லை. இதையடுத்து, மோடி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாகவும், மத்திய அமைச்சர்களின் பேச்சுக்கு தொடர்ந்து இடையூறு செய்ததாகவும் காங்கிரஸ் மக்களவைக் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மீது குற்றம்சாட்டி தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டு அவர் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.







