புதுக்கோட்டை விசலூர் பகுதியைச் சேர்ந்த கருப்பையா என்பவர் தஞ்சாவூர் அரசுப் பேருந்தில் நடத்துனராக பணிபுரிந்து வருகிறார். இவர் மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து (TN.55. N 0972) தஞ்சாவூருக்கு அரசுப் பேருந்தில் பணிக்கு நடத்துனராக இரவில் சென்றார்.
அப்போது பின்பக்க கதவு அருகே உள்ள கம்பி மீது நின்று கொண்டு பயணிகளிடம்
டிக்கெட்டுகளை அளித்து உரிய கட்டணத் தொகையை பெற்று வந்தார். இந்தப் பேருந்தை ஓட்டிய ராஜா, யானைமலை ஒத்தக்கடை அடுத்த தனியார் வங்கி அருகே வளைவில் பேரிகாட் இருப்பதை அறிந்த திடீரென பிரேக் அடித்தார். இதில், நடத்துனர் கருப்பையா (வயது 55) நிலை தடுமாறி சாலையில் விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த ஒத்தக்கடை பொதுமக்கள் மற்றும் போலீசார் கருப்பையாவைவின் உடலை மீட்டு அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக யானைமலை ஒத்தக்கடை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓட்டுநர் ராஜா கவனக்குறைவால் பின் பக்க கதவை மூடாததால் இந்த விபத்து நேர்ந்தது என பயணிகள் கூறுகின்றனர். விபத்து நடந்த சாலைப் பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் தேசிய நெடுஞ்சாலையின் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் வேகத் தடை மற்றும் மின் விளக்குகள் அமைத்திடுமாறும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.








