நடிகர் சங்கம் சார்பில் வரும் 19-ம் தேதி விஜயகாந்துக்கு இரங்கல் கூட்டம்! பொருளாளர் கார்த்தி அறிவிப்பு!

தேமுதிக தலைவரும்,  நடிகருமான விஜயகாந்த் மறைவுக்கு, நடிகர் சங்கம் சார்பில் வரும் 19-ம் தேதி இரங்கல் கூட்டம் நடத்தப்படவுள்ளது.   தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் (71) உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 28-ஆம் தேதி…

தேமுதிக தலைவரும்,  நடிகருமான விஜயகாந்த் மறைவுக்கு, நடிகர் சங்கம் சார்பில் வரும் 19-ம் தேதி இரங்கல் கூட்டம் நடத்தப்படவுள்ளது.  

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் (71) உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 28-ஆம் தேதி காலை காலமானார்.  தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தின் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தற்பொழுது,  விஜயகாந்த் நினைவிடத்தில் இறுதி அஞ்சலி செலுத்த முடியமால் போன நடிர்கள் பலரும் வருகை தந்து அஞ்சலி செலுத்திவருகிறார்கள்.  இந்த நிலையில், விஜயகாந்தின் நினைவிடத்தில் நடிகரும், நடிகர் சங்க பொருளாளருமான கார்த்தி மற்றும் அவரது தந்தை சிவக்குமார் ஆகியோர் மலர்தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

விஜயகாந்த் மறைந்த அன்று,  கார்த்தி ஊரில் இல்லாததால்,  இறுதிச் சடங்கில் கலந்துக் கொள்ள முடியவில்லை.  இன்று சென்னை திரும்பிய உடன், கேப்டன் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.  இதன்பின், சாலிகிராமம் இல்லத்திற்கு சென்று பிரேமலதாவிற்கு ஆறுதல் கூறினர்.

விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு, மெல்லிய குரலில் பேசிய நடிகர் கார்த்தி,  “கேப்டன் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளாமல் போனது,  என் வாழ்நாள் முழுவதும் குறையாகவே இருக்கும்” என்று உருக்கமாக பேசிய அவர்,  விஜயகாந்த் புகழ் நிலைத்து நிற்கும் வகையில் அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறினார்.

மேலும்,  தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் ஜனவரி 19ம் தேதி கேப்டன் விஜயகாந்திற்கு இரங்கல் கூட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.  நடிகர் சங்கத்தில் பெரிய சவால்கள் வரும் போது எல்லாம் நாங்கள் அனைவரும் நினைத்துக் கொள்ளக்கூடிய ஒரு மனிதராக கேப்டன் திகழ்ந்தார் என்று சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியபின் நடிகர் கார்த்தி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.