ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் பொறுப்பு வகித்த 9 ஐஏஎஸ் அதிகாரிகளை கட்டாய ஓய்வில் அனுப்புமாறு மாநில தகவல் ஆணையம் தமிழக தலைமை செயலாளருக்கு பரிந்துரை செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் உதவிப்பேராசியர் பணியிடத்திற்கான தேர்வெழுதியவர்கள், தேர்வு ஆணையம் வினாக்களுக்கான விடைகளை எந்த புத்தகத்திலிருந்து தேர்ந்தெடுக்கிறது என்கிற விவரங்களை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டிருந்தனர். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு தகவல் ஆணையம் நடத்திய பல கட்ட விசாரணையில் தமிழ்நாடு மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்த புத்தகங்களில் கொடுக்கப்பட்டுள்ள விடைகளை சரியாக குறிப்பிட்டிருந்தும், ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம் மதிப்பெண் வழங்காதது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த சில ஆண்டுகளாக நடத்திய பல தேர்வுகளில் கேள்விகள் வடிவமைப்பு, விடைக்குறிப்புகளை தயாரித்தல் உள்ளிட்ட பல விவகாரங்களில் வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளதாக மாநில தகவல் ஆணையர் தமிழக அரசுக்கு தெரிவித்துள்ளார்
இந்த நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வுகளில் வெளிப்படைத் தன்மையை கடைப்பிடிக்கவில்லை என மாநில தகவல் ஆணையம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இதனையடுத்து மாநில தகவல் ஆணையத்தின் ஆணையர் முத்துராஜ், தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ன்படி தமிழக தலைமை செயலாளருக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை
செய்துள்ளார்.
இதனால் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் பொறுப்பு வகித்த 9 அதிகாரிகளை கட்டாய பணி ஓய்வில் அனுப்புமாறு தகவல் ஆணையம் மாநில அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.







