விரைவில் உருவாகிறது #Thangalaan2 …விக்ரம் கொடுத்த அப்டேட்!

தங்கலான் திரைப்படத்தின் 2-ம் பாகம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார்.  பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘தங்கலான்’. இத் திரைப்படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி,…

தங்கலான் திரைப்படத்தின் 2-ம் பாகம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார். 

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘தங்கலான்’. இத் திரைப்படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, ஹரி கிருஷ்ணன் மற்றும் டேனியல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் 1900 களில் கோலார் கோல்ட் ஃபீல்ட்டில் {கே.ஜி.எஃப்} தங்கத்துக்காக ஒடுக்கப்பட்ட சமுதாயம் எப்படி அழிக்கப்பட்டது என்பதை பற்றி பேசும் திரைப்படமாக அமைந்துள்ளது.

இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. இந்த திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். பா.ரஞ்சித்துடன் இணைந்து ஜி.வி.பிரகாஷ் பணியாற்றுவது இதுவே முதல் முறை.  தங்கலான் படத்தின் பாடல்கள் மினுக்கி, தங்கலானே ஆகியவை நல்ல வரவேற்பைப் பெற்றது.இந்த நிலையில்,  சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘தங்கலான்’ திரைப்படம் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 15) திரையரங்குகளில் வெளியான நிலையில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

இத்திரைப்படம் முதல்நாளில் உலகம் முழுவதும் ரூ. 26.44 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்திருந்தது. இந்த நிலையில் ஹைதராபாத்தில் புரமோஷனுக்காக சென்ற நடிகர் விக்ரம், “எங்களுக்கு இந்தப் படத்தில் 100 பாகங்கள்கூட எடுக்க முடியும். ஆனால், தங்கலான் உங்களுக்கு பிடிப்பதால் நீங்கள் காட்டும் அன்பிற்காக இதன் இரண்டாம் பாகத்தை உருவாக்க எங்களுக்கும் ஆசை இருக்கிறது. இது குறித்து தயாரிப்பாளர் இயக்குநர் எல்லாம் கலந்துரையாடினோம். பா. ரஞ்சித் தனது அடுத்த பட வேலைகளெல்லாம் முடித்துவிட்டால் உடனே இது குறித்து பேசுவோம். அவர் அழைத்தால் உடனே சென்றுவிடுவேன்” என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.