போலியாக பில் போடும் நியாய விலைக் கடை ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு கூட்டுறவுத்துறை பதிவாளர் சண்முகசுந்தரம் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக கூட்டுறவுத்துறை பதிவாளர் சண்முக சுந்தரம், அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு தெரிவித்துள்ள அறிவிப்பில், வழங்கப்படாத பொருட்கள் வழங்கப்பட்டதாக தங்களுக்கு குறுஞ்செய்தி வருகிறது என குடும்ப அட்டைதாரர்களிடமிருந்து TN Portal என்னும் இணையதளத்தில் புகார்கள் வரப்பெறுவதாக கூறியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இவ்வாறு வழங்கப்படாத பொருட்களுக்கு வழங்கப்பட்டதாக குறுந்தகவல் பெறப்பட்டதாக புகார்கள் வரப்பெற்றால் சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவுத்துறை பதிவாளர் எச்சரித்துள்ளார்.
இதனை தங்கள் மண்டல கட்டுப்பாட்டில் உள்ள நியாயவிலைக் கடை விற்பனையாளர்களுக்கு தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்வதாகவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
புகார்களில் குறிப்பிட்ட முறைகேடுகள் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு கடுமையான தண்டனை வழங்க அறிவுறுத்தி அவற்றைக் கண்காணிக்குமாறு கேட்டுக்கொள்வதாகவும் கூட்டுறவுத்துறை பதிவாளர் சண்முகசுந்தரம் கூறியுள்ளார். இவ்வாறு நடைபெறும் முறைகேடுகளை கண்காணிக்க தவறும் சம்பந்தப்பட்ட ஆய்வு அலுவலர்கள் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.