கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத் மாநிலங்களின் முதலமைச்சர்கள் கோயில்களுக்குச் சென்று வழிபாடு மேற்கொண்டனர்.
கிருஷ்ண ஜெயந்தி நேற்று உலகம் முழுவதும் உள்ள இந்து ஆலயங்களில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்தியாவில் உள்ள கிருஷ்ணர் ஆலயங்களில் வழக்கமான உற்சாகத்துடன் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
உத்தரப்பிரதேசத்தில் பகவான் கிருஷ்ணர் பிறந்த மதுராவில் உள்ள ஆலயத்திற்குச் சென்ற அம்மாநில முதலமைச்சரும் துறவியுமான யோகி ஆதித்யாநாத், கோயிலில் வழிபாடு மேற்கொண்டார்.
இதையடுத்து, கோரக்பூரில் உள்ள தனது மடத்திற்குச் சென்ற ஆதித்யாநாத், அங்கும் வழிபாடு மேற்கொண்டு குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தார்.
அப்போது பேசிய அவர், கிருஷ்ணர் பூமிக்கு வந்து 5 ஆயிரம் ஆண்டுகள் ஆன பின்னரும் அவரது பிறந்த நாளை உலகம் முழுவதிலும் சிறப்பாகக் கொண்டாடுவதில் இருந்தே அவரது தாக்கம் எத்தகையது என்பதை புரிந்து கொள்ளலாம் என குறிப்பிட்டார்.
மத்தியப்பிரதேச தலைநகர் போபாலில் உள்ள கிருஷ்ணர் ஆலயத்திற்குச் சென்ற முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான், அங்கு பக்தர்களுடன் சேர்ந்து வழிபாடு மேற்கொண்டார். மேலும், அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உரியடி விழாவிலும் கலந்து கொண்டு பானையை உடைத்து கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடினார்.
குஜராத்தின் துவாரகாவில் உள்ள கிருஷ்ணர் ஆலயத்திற்குச் சென்ற அம்மாநில முதலமைச்சர் பூபேந்திர படேல், வழிபாடு மேற்கொண்டார். அவருக்கு ஆலய அர்ச்சகர்கள் பொன்னாடை போர்த்தி பிரசாதங்களையும், நினைவுப் பரிசுகளையும் வழங்கினர்.
குஜராத்தின் அகமதாபாத் நகரில் உள்ள இஸ்கான் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அங்கு வழிபாடு மேற்கொண்டார்.