மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவின்போது நடந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மமதா பானர்ஜி ஆறுதல் கூறினார்.
மேற்கு வங்க மாநிலம் கூச் பெஹார் மாவட்டத்தில் சித்தால்குச்சி பகுதியில் கடந்த 10ம் தேதி நடந்த வாக்குப்பதிவின் போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் நான்குபேர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசாருக்கு எதிராக மமதா கடும் கண்டனம் தெரிவித்தார். இந்த நிலையில் இன்று அவர் கூச் பெஹார் மாவட்டத்தில் உள்ள சித்தால்குச்சி பகுதிக்குச் சென்றார்.
அங்கு துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய உயிரிழந்தோரின் குடும்பத்தினர், தேர்தல் முடிவடைந்த உடன் தங்களுக்கு உதவி அளிப்பதாக மமதா தெரிவித்ததாகவும் மேலும், அவர் தங்களை சந்தித்தது நம்பிக்கையளிப்பதாக உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.







