31.3 C
Chennai
May 13, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் திருவுருவச்சிலை: திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

நாமக்கல்லில் சிலம்பொலி செல்லப்பன் சிலப்பதிகார அறக்கட்டளையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனின் திருவுருவச்சிலை மற்றும் அறிவகத்தை முகாம் அலுவலத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது :

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

செல்லப்பன் என்ற பெயரே மறைந்து ‘சிலம்பொலி’, ‘சிலம்பொலியார்’ என்று அழைக்கப்பட்டவர் தான் தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார். அவரது உரையை கேட்டு, செல்லப்பன் என்ற பெயரை ‘சிலம்பொலி செல்லப்பன்’ என அழைக்கத் தொடங்கினார் ‘சொல்லின் செல்வர்’ இரா.பி. சேதுப்பிள்ளை. சொல்லின் செல்வரின் வாக்குதான் பலித்தது. வாழ்நாள் முழுவதும் சிலம்பொலியாராகவே வாழ்ந்தார்.
சிலம்பொலியார் என்று தலைவர் கருணாநிதியால் அன்போடும் பாசத்தோடும் அழைக்கப்படக் கூடியவரின் சிலையைத் திறந்து வைக்கும் வாய்ப்பைப் பெற்றமைக்காக உள்ளபடியே பெருமை அடைகிறேன்.

* தமிழ்நாடு எங்கும் சுற்றிச் சுழன்று, சிலப்பதிகாரத்தின் மாண்பினையும் செந்தமிழின் மேன்மையையும் திறம்பட முழங்கி வருபவர் என்றும்,

* சீரிய செயல் புரியும் நண்பர் என்றும்,

* இளங்கோவடிகளின் செந்தமிழ்க் காப்பியத்தில் மூழ்கித் திளைத்தவர் என்றும்,

* முத்துக்குளித்து அதில் நல்ல சிப்பிகளை மேலே கொண்டு வந்து கருத்தோவியம் படைத்தவர் என்றும், தலைவர் கலைஞர் அவர்களால் பாராட்டப்பட்டவர்தான், சிலம்பொலியார்.

எப்போது பார்த்தாலும் முகம் மலர்ந்த சிரிப்புடன் இருக்கும் சிலம்பொலியாரைச் சிலையாகப் பார்க்கும்போதும், நேரில் பார்ப்பதைப் போன்றே இருக்கிறது! சிலம்பொலியார் எழுதிய ‘சிலம்பொலி’ என்ற புத்தகத்தை 1975-ஆம் ஆண்டு முதலமைச்சர் கருணாநிதி தான் சென்னையில் வெளியிட்டார்.

“எல்லோரும் ஆராய்ச்சி செய்து பட்டம் பெறுவார்கள். செல்லப்பன்தான் ‘சிலம்பொலி’ என்ற பட்டத்தைப் பெற்ற பிறகு, ஆராய்ச்சி நூலை வெளியிட்டு இருக்கிறார் என்று சொன்னார் கருணாநிதி. அன்று, சிலம்பொலி புத்தகத்தை வெளியிட்டவர் கருணாநிதி. இன்று, சிலம்பொலியார் சிலையை நான் திறந்து வைக்கிறேன். இது எனக்குக் கிடைத்த பெருமை!

எளிய வேளாண் குடும்பத்தில் பிறந்து வாழ்நாளெல்லாம் தமிழை விளைவித்த, ‘தமிழ் உழவர்’தான் நம்முடைய சிலம்பொலியார். பள்ளி ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கி – பள்ளித் தலைமை ஆசிரியர் -மாவட்டக் கல்வி அலுவலர் – தமிழ் வளர்ச்சி இயக்குநர் – உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் என வளர்ந்தார். கல்லூரியில் B.A., கணக்கு பாடம் படித்தாலும், இவர் தமிழ்ப் பற்றாளராக வளர்வதற்கு திராவிட இயக்கம் காரணமாக அமைந்துள்ளது. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம், குன்றக்குடி அடிகளார், தலைவர் கருணாநிதி ஆகியோரின் உரைகளைக் கல்லூரிக் காலத்தில் கேட்டு உணர்ச்சி பெற்றார்.

குறிப்பாக, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கவிதைகள்தான், இவரது தமிழ் ஒலிக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்துள்ளது. திருச்சி நேஷனல் கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்த காலத்தில் ‘இந்தி இந்நாட்டுக்கு பொதுமொழியாக இருக்கலாமா?’ என்ற விவாதத்தில் கலந்து, ‘இருக்கக் கூடாது’ என்று பேசினார். கல்லூரி படிப்பைப் பற்றி கவலைப்படாமல் இத்தகைய உணர்ச்சியைப் பதிவு செய்தார்.
ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கி மாவட்டக் கல்வி அலுவலராக உயர்ந்தார் சிலம்பொலியார் அவர்கள். 1967-ஆம் ஆண்டு கழக ஆட்சி அமைந்தபோது, பேரறிஞர் அண்ணா அவர்கள் இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டை சென்னையில் நடத்தினார்.

அப்போது மாநாட்டுத் தனி அலுவலராக சிலம்பொலியார் அவர்களைத்தான் முதலமைச்சர் அண்ணா நியமித்தார். உலகத் தமிழ் மாநாட்டு மலரை உருவாக்கும் பொறுப்பும் அவருக்குத்தான் தரப்பட்டது.

தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநராக இவர் பணியாற்றிய போது, இயக்குநர் பதவிக்கு இவர் விண்ணப்பிக்கவில்லை. “ஏன் விண்ணப்பிக்கவில்லை” என்று கேட்டவர் அன்றைய முதலமைச்சர் கருணாநிதி. 1976-ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்ட போது, சிலம்பொலியாரைப் பழிவாங்கும் நோக்கத்துடன் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் பொறுப்பில் இருந்து தகுதி இறக்கம் செய்து, பள்ளித் தலைமை ஆசிரியர் ஆக்கியது அன்றைய கவர்னர் ஆட்சி. அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை கவர்னர் ஆட்சி என்றால் இப்படி தான் நிர்வாகம் தெரியாமல் நடந்துள்ளது. 1989-ஆம் ஆண்டு கழக ஆட்சி மீண்டும் மலர்ந்ததும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநராக முதலமைச்சர் கருணாநிதி நியமித்தார்.

பள்ளி ஆசிரியராக இருந்தாலும் – தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநராக இருந்தாலும் – தமிழ்நாட்டு மேடைகளில் சிலம்பொலிக்காமல் இருந்தது இல்லை செல்லப்பனார். பழங்காலப் புலவர்களைப் போலவே புலமைத் திறனும், சொல்லாட்சியும், அதேநேரத்தில் தமிழ் உரிமைக்காகப் போராடும் உணர்ச்சியும் ஒருங்கே பெற்றவர் நம்முடைய சிலம்பொலியார் .

* ஆயிரம் நூல்களுக்கு அணிந்துரை வழங்கி இருக்கிறார்.

* சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற தமிழ் இலக்கியங்களைத் தொடர் சொற்பொழிவாக நடத்தியிருக்கிறார்.

* புலவர் குழந்தையின் புரட்சி இலக்கியமான இராவண காவியத்தைத் தொடர் சொற்பொழிவாற்றிய பெருமையும் இவருக்குத்தான் உண்டு.

* 55 ஆண்டுகளாக 4 ஆயிரம் இலக்கியக் கூட்டங்களில் பங்கெடுத்து உரையாற்றி இருக்கிறார்.

* எந்தப் பாடலைப் படித்தாலும் மனப்பாடமாக ஒப்பிக்கும் ஆற்றல் அவருக்கு இருந்தது.

* தனது நூலகத்தில் 10 ஆயிரம் புத்தகங்கள் வைத்திருந்தார்.

* இவர் அளவுக்கு இலக்கியத் தொடர் சொற்பொழிவுகள் நடத்திய தமிழறிஞர்கள் இருக்க மாட்டார்கள்.

* சிலம்பொலி

* இலக்கியச் சிந்தனைகள்

* பெருங்கதை ஆராய்ச்சி

* நெஞ்சை அள்ளும் சீறா

* பாவேந்தர் ஓர் உலகக் கவிஞர்

* காப்பியக் கம்பரும் புரட்சிக் கவிஞரும்

* வளரும் தமிழ்

* சங்க இலக்கியத் தேன்

– ஆகியவை அவரது புகழ் பெற்ற நூல்கள்.

சிலம்பொலியாரிடம் அணிந்துரை வாங்குவது, தங்களது நூலுக்கு மகுடம் எனக் கருதி தமிழ் ஆராய்ச்சியாளர்கள் வாங்குவார்கள். தமிழ் இனிமையான மொழி என்பதை அவரது சொற்பொழிவுகளைக் கேட்கும் போது உணரலாம். புரட்சிக் கவிஞரின் கவிதைகளை அவர் சொல்லும் போது உணர்ச்சி கொப்பளிக்கும். இத்தகைய பெருமைக்குரிய தமிழ் அடையாளமாக விளங்கும் சிலம்பொலியார் அவர்களுக்குச் சிலை அமைப்பது மிக மிக மகிழ்ச்சிக்குரியது. அதனை திறந்து வைப்பதை என் வாழ்நாளில் கிடைத்தற்கரிய வாய்ப்பாகக் கருதுகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading