சீர்காழியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் ஆய்வு செய்து, மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.
சீர்காழியில் 122 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கனமழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த வரலாறு காணாத கனமழை காரணமாக 32 கிராமங்கள் பாதிக்கப்பட்டன. சீர்காழியில் மட்டும் 9 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 7,156 குடும்பங்களை சேர்ந்த 16 ஆயிரத்து 577 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சீர்காழி சென்றார். அங்கு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் பச்சை பெருமாநல்லூரில் குடிசை வீட்டில் தங்கி இருந்த மக்கள் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார்.
தொடர்ந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளை முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். அப்பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களை பார்வையிட்டு, விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர் அவருடைய பணிகளை சிறப்பாக செய்து வருகிறார். அவர் மட்டும் இதை செய்தால் போதாது. அதனால் தான் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை இன்று ஆய்வு செய்ய வேண்டும் என வந்துள்ளேன்.
மக்கள் திருப்தியாக தான் உள்ளனர். இன்னும் சில குறைகள் மக்களிடம் இருக்கிறது. அதை இன்னும் ஐந்து, ஆறு நாட்களில் முழுவதுமாக தீர்த்து வைத்து விடுவோம் என கூறினார்.
நியூஸ்7 தமிழ் செய்தியாளர் ஏக்கருக்கு 30,000 வழங்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்படுகிறது என்கிற கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த முதலமைச்சர், ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துக்களை கூறுவார்கள். எதிர்க்கட்சியில் இருந்து விமர்சனம் செய்ய வேண்டும் என்பதற்காக கேவலப்படுத்துவதற்காக அரசியல் செய்வதற்காக, அப்படி கூறுவார்கள். அதை பற்றி எல்லாம் நாம் கேட்டுக் கொண்டு இருக்க முடியாது. மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதற்கு ஏற்றவாறு கணக்கெடுப்பு எடுத்து அந்த அடிப்படையில் நடவடிக்கை இருக்கும் என கூறினார்.