தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சாமியார் சதுர்வேதி ஜூலை 31ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை தியாகராய நகர் பசுல்லா சாலையில் ஸ்ரீராமானுஜர் மிஷன் என்ற பெயரில்
அறக்கட்டளையை நிறுவி ஒவ்வொரு மாதம் அமாவாசையன்று சொற்பொழியாற்றி வந்தவர் சரவணன் என்கிற பிரச்சன்ன வெங்கடாசாரியார் சதுர்வேதி. தன்னை கிருஷ்ணனின் அவதாரம் எனவும் அரிசியை வெண்பொங்கலாக மாற்றி காட்டுவது போன்றவற்றை செய்து பக்தர்களிடையே பிரபலமடைந்து வந்தார்.
இவரை கடந்த 2004 ஆம் ஆண்டு சென்னை ஆழ்வார்ப்பேட்டையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தொழிலில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக சந்திக்க வந்துள்ளார். பின்னர் பிரச்சனையை தீர்த்து வைப்பதாக கூறி பூஜை செய்ய வேண்டும் என தொழிலதிபரை ஏமாற்றி அவரிடம் கோடிக்கணக்கில் பணத்தை பறித்து, அவரின் வீட்டையும் சதுர்வேதி சாமியார் ஆக்கிரமித்து கொண்டார். மேலும் அவரது மகள் மற்றும் மனைவியை சதுர்வேதி சாமியார் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்து ஆந்திராவிற்கு கடத்தி கொண்டு சென்றுள்ளார்.
இது தொடர்பாக சதுர்வேதி மீது தொழிலதிபர் கடந்த 2004ஆம் ஆண்டு மத்திய
குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடத்தல், கற்பழிப்பு, சிறை வைத்தல் உள்ளிட்ட 18 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து சதுர்வேதி சாமியார் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.
இந்த வழக்கில் சதுர்வேதி சாமியாருக்கு மகளிர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. பின்னர் தலைமறைவான சதுர்வேதி சாமியாரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2016ஆம் ஆண்டு கைது செய்தனர். இதனையடுத்து ஜாமீனில் வெளிவந்த சதுர்வேதி சாமியார் மீண்டும் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார்.
இதனையடுத்து சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் சதுர்வேதி சாமியாரை கடந்த ஜூன் 27ஆம் தேதி தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது. இந்த நிலையில் வரும் 31ஆம் தேதி காலை 10.30மணிக்கு முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் சாமியார் சதுர்வேதி ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இதே போல சாமியார் சதுர்வேதி மீது சென்னை மத்திய குற்றப்பிரில் தொழிலதிபர் திருஞானம் என்பவரிடம் 30லட்சம் பறித்து அவரை தாக்கிய வழக்கு உட்பட 5 மோசடி
வழக்குகள் மற்றும் ஒரு கற்பழிப்பு வழக்கு நிலுவையில் உள்ளதாக போலீசார்
தெரிவித்துள்ளனர்.







