மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு கொடுக்க வேண்டிய வரி வருவாயை முழுமையாக கொடுக்கவில்லை என அமைச்சர் பி.மூர்த்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்கம் சார்பாக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட பொதுக் குழு உறுப்பினர் கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி.மூர்த்தி பங்கேற்றார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பி.மூர்த்தி, திமுக அரசு ஓராண்டு காலத்தில் அத்தனை துறையிலும் பல்வேறு வேலைவாய்ப்பு வசதிகள், பொதுமக்களுக்கு அடிப்படை தேவைகளையும், தொழிற்சாலைகளையும் உருவாக்கியுள்ளோம். பத்தாண்டு காலத்தில் செய்ய முடியாததை ஓராண்டு காலத்தில் செய்துள்ளோம் என கூறினார்.
மேலும், ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு கொடுக்க வேண்டிய மின் பகிர்வை கொடுக்கவில்லை. ஒன்றிய தொகுப்பிலிருந்து வரவேண்டிய மின் பகிர்வு பற்றாக்குறை குறித்து முதல்வர் தெளிவாக சட்டப்பேரவையில் விளக்கினார். நல்லது செய்ய வேண்டும் என்ற முதல்வரின் எண்ணத்தை மக்கள் தெளிவாக புரிந்து கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இலங்கைக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை செய்ய தீர்மானம் நிறைவேற்றி உதவிகளை செய்ய முன்வந்தவர் முதல்வர். வாயில் சொல்வது எளிது, ஆனால் சொன்னதை செய்பவர் நமது முதலமைச்சர் என குறிப்பிட்டார்.
தமிழ்நாடு பங்கீடு நிதிகளை பெற்றுக் கொண்டு, 1ரூபாய்க்கு 35 பைசா மட்டுமே ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு கொடுக்கிறது. வணிகவரித் துறையில் முழுமையான வரி வருவாயை கொடுத்தாலே தமிழக அரசு இன்னும் சேவை செய்யும். தமிழக பணத்தை பெற்றுக்கொண்டு அதை திருப்பிக்கொடுக்காமல் இதை செய்வோம் அதை செய்வோம் என சொல்வது வெறும் பேச்சு மட்டுமே என குற்றஞ்சாட்டினார்.