தமிழ்நாட்டிற்கு காவிரி நீரைத் திறந்துவிட முடியாது என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார்.
காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டம், டெல்லியில் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில், காணொலி வாயிலாக நடைபெற்றது. தமிழ்நாடு சார்பில் திருச்சி மண்டல தலைமை பொறியாளர் சுப்பிரமணியன் மற்றும் காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் இதில் பங்கேற்றனர். இதில், தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீரை கர்நாடகா அரசு திறந்து விட வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டது.
இந்நிலையில் காவிரி நீர் விவகாரம் தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடக்கூடாது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் காவிரி நீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தை நாட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா கூறியதாவது:
“மழை இல்லாததால் கர்நாடகம் தீவிர தண்ணீர் பிரச்னையை எதிர்கொண்டு வருகிறது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிடும் சூழ்நிலையில் கர்நாடகம் இல்லை. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை நாட நாங்கள் முடிவு செய்துள்ளோம். மேலும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவிடமும் மனு அளிக்கவிருக்கிறோம். நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் பேசுவார்கள்.
பிரதமர் மோடிக்கும் மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடமும் முறையிடுவோம். கர்நாடகத்தின் தண்ணீர் தேவையைப் போக்கவே 70 டிஎம்சி நீர் தேவைப்படுகிறது. எங்களிடம் 53 டிஎம்சி தண்ணீர் மட்டுமே இருப்பதால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடும் சூழல் இல்லை” இவ்வாறு தெரிவித்துள்ளார்.







