சேலம் பெரியார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு வினாத்தாளில் சாதி குறித்து கேட்கப்பட்ட கேள்வி சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.
M.A., வரலாறு பாட 2-வது செமஸ்டர் தேர்வு வினாத்தாளில் தமிழ்நாட்டில் எது தாழ்ந்த சாதி என்ற கேள்வி இடம்பெற்றுள்ளது. மஹர், நாடார், ஈழவர், அரிஜன் ஆகிய சமூகப் பிரிவுகளைக் குறிப்பிட்டு இவற்றுள் தமிழ்நாட்டில் எது தாழ்ந்த சாதி என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது கடும் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. மேலும், தமிழ்நாட்டில் சுதந்திர போராட்ட இயக்கங்கள் 1880-ம் ஆண்டு முதல் 1947-ம் ஆண்டு வரை என்கிற தலைப்பில் கேள்வி இடம் பெற்றுள்ளதும் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. சாதி ஒழிப்பில் ஈடுபட்ட பெரியார் பெயரில் இயங்கும் பல்கலைக்கழகத்தில் சாதிகளைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பியுள்ளது தற்போது கடும் விவதாப் பொருளாக மாறியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த கேள்வி குறித்து பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகன்நாதன் கூறியுள்ளதாவது: தேர்வுக்கான வினாத்தாள் பெரியார் பல்கலைக்கழகத்தால் தயாரிக்கப்பட்டது இல்லை. பிற பல்கலைக்கழகம் / கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களால் தயார் செய்யப்பட்ட வினாத்தாள் அது. வினாத்தாள் கசிந்துவிடக் கூடாது என்பதற்காக அதை முன்கூட்டியே படித்து பார்க்கும் நடைமுறை பெரியார் பல்கலைக்கழகத்தில் கிடையாது. சர்ச்சைக்குரிய கேள்வி குறித்து என் கவனத்துக்கு வரவில்லை. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும். மேலும், மறு தேர்வு நடத்துவது பற்றி பரிசீலிக்கப்படும். சர்ச்சைக்குரிய வினாத்தாளை வடிவமைத்தது யார்? என்று விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க பெரியார் பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உரிய விசாரணை நடத்த விசாரணைக் குழு அமைக்கப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
-ம.பவித்ரா