சனாதனம் பேச்சு தொடர்பான வழக்கில் பதில் அளிக்க தமிழ்நாடு அரசு, திராவிடர் கழகம், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு பங்கேற்றது அரசியலமைப்பு சாசனத்திற்கு முரணானது என அறிவிக்க கோரியும், அந்த மாநாட்டின் பின்னணியை கண்டறிய சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பாக விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதி அனிருத்தா போஸ் மற்றும் நீதிபதி பீலா.எம். திரிவேதி அடங்கிய அமர்வில் இன்று விசாரணை வந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது இந்த விவகாரத்தில் ஏன் உயர் நீதிமன்றத்தை நாடி இருக்கக் கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு அனுமதி தேவை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிடவே விரும்பவில்லை எனவும் நீதிபதிகள் கூறினர்.
அமைச்சர் ஒருவர் வெறுப்பு பேச்சை ஊக்குவிக்கிறர். அவர் அரசின் பிரதிநிதி தனி நபர் அல்ல, அமைச்சராக இருந்து கொண்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது ஏற்புடையதல்ல என மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
இதனையடுத்து தமிழ்நாடு அரசு, திராவிடர் கழகம், அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.