கன்னியாகுமரியில் காவல்துறை தடையை மீறி கடற்கரையில் நடைபெற்ற மஹா சமுத்ரா தீர்த்த ஆரத்தியில் கலந்து கொண்ட 300 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா 2வது அலையின் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால், மாநிலம் முழுவதும் தளர்வுகளுடனான ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே அறிவிக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், கன்னியாகுமரியில், முக்கடல்கள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் பூஜைகள் நடத்த அம்மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
ஆனால், காவல்துறையின் தடையை மீறி, திருதொண்டர் பேரவை சார்பில் மஹா சமுத்ரா தீர்த்த ஆரத்தி நடைபெற்றது. இதில், பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபட்டனர். தடை உத்தரவை மீறி பூஜைகள் நடைபெற்றதாக, அதில் பங்கேற்ற 300 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.







