திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது அளித்த புகாரை நடிகை திரும்பப் பெற்றுள்ளார். இதையடுத்து இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் தகவல் தொழில்நுட்பதுறை அமைச்சராக இருந்தவர் மணிகண்டன். அவர் தன்னை திருமணம் செய்துகொள்வதாகச் கூறி ஏமாற்றியதாக திரைப்பட நடிகை ஒருவர் பாலியல் புகார் அளித்தார். முன்னாள் அமைச்சர் மீது நடிகை தெரிவித்த இந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. புகாரின் பேரில் மணிகண்டன் மீது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர்.
அதன்பின் மணிகண்டன் தரப்பில் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுக்கள் அடுத்தடுத்து தள்ளுபடி செய்யப்பட்டன. பின்னர் சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது. இந்நிலையில், இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சைதாப்பேட்டை 11வது நீதிமன்றத்தில் அடையாறு மகளிர் போலீசார் 351 பக்க குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில் தன் மீது நடிகை தொடுத்துள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, மணிகண்டன் மீது அளித்த புகாரை திரும்பப் பெறுவதாக நடிகை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தனது புகழுக்கு களங்கம் விளைவித்ததாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன், புகார் தெரிவித்தால் என்னவாகும் என அந்த நடிகையை கண்டித்த நீதிபதி சதீஷ்குமார், மணிகண்டன் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.







