கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்த தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம்
வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அமைச்சர்கள் இத்தாலி பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இத்தாலி நாட்டின் ரோம் நகரில் மே 15ஆம் தேதி மறைசாட்சி தேவசகாயம்
பிள்ளைக்கு புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.போப் ஆண்டவர்
புனிதர் பட்டத்தை இவருக்கு அறிவிக்கிறார். தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் புனிதர்
பட்டம் பெறுவது வரலாற்றிலேயே முதல்முறையாகும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் தகவல்
தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், சிறுபான்மையினர் நலன் மற்றும்
வெளிநாடு வாழ் தமிழர் நலன் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் சென்னையில் இருந்து இத்தாலி புறப்பட்டனர்.
அப்போது, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சிறுபான்மையினர்
ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறுகையில், தமிழகத்தின் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த புனித தேவசகாயம் பிள்ளைக்கு இத்தாலி நாட்டில் புனிதர் பட்டம் வழங்கப்படவுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இந்த பட்டம் வழங்கப்படுவதால் தமிழக அரசின் பிரதிநிதியாக அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், மனோ தங்கராஜ் ஆகியோர் செல்கிறோம். இதன் மூலமாக தமிழக கிறிஸ்தவ மக்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பெருமை சேர்த்துள்ளார். தமிழக மக்களின் நல்லெண்ணத்தை எடுத்துச் சென்று அங்கு இருக்கின்ற கத்தோலிக்க மார்க்கத்தின் தலைவர்களுக்கு நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவிக்க பிரதிநிதியாகச் செல்கிறோம் என்றார்.
அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறுகையில், கத்தோலிக்க மார்க தலைவர்களைச் சந்தித்து தமிழக முதல்வர் மற்றும் தமிழக மக்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவிக்கவுள்ளோம். இந்த பயணத்தை புனிதப் பயணமாக தற்போது மேற்கொண்டுள்ளோம் என்றார்.
அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில், தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்து பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்து மிகச் சிறந்த சமூகத்திற்காக பாடுபட்டு உயிர்நீத்த தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட உள்ளது. இது குமரி மாவட்ட மக்களிடமும், கிறிஸ்துவ மக்களிடமும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி நாங்கள் குழுவாகச் செல்கிறோம். கன்னியாகுமரி மாவட்ட மக்களின் சார்பாக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
இது ஒரு சிறப்பான நிகழ்வு அங்கு செல்வதை ஒரு பெரிய அரிய வாய்ப்பாக நாங்கள்
கருதுகிறோம். கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்து சமூக சீர்திருத்தத்திற்காகப்
பாடுபட்டு உயிர் நீத்தவருக்கு புனிதர் பட்டம் வழங்குவதில் மகிழ்ச்சி என்றார்.