உள் ஒதுக்கீடு ரத்து; தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய விஜயகாந்த் வலியுறுத்தல்

10.5% உள் ஒதுக்கீட்டை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்ட நிலையில், இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “மிகவும்‌…

10.5% உள் ஒதுக்கீட்டை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்ட நிலையில், இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “மிகவும்‌ பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 20 சதவீத ஒதுக்கீட்டில்‌, வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்‌ ஒதுக்கீடு வழங்கி, கடந்த அதிமுக ஆட்சியில்‌ சட்டம்‌ இயற்றப்பட்டது.

இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில்,‌ சாதிவாரியான கணக்கெடுப்பை முறையாக நடத்திய பின்னரே இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும்‌ எனக் கூறி வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத உள்‌ ஒதுக்கீட்டை சென்னை உயர் நீதிமன்றம்‌ ரத்து செய்துள்ளது.

தேர்தலுக்காகவும்‌, கூட்டணிக்காகவும்‌ மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதாகத் தேர்தலுக்கு முன்பே நான்‌ சொன்னது தற்போது உண்மையாகியுள்ளது. இருப்பினும்‌ 10.5 சதவீத உள்‌ ஒதுக்கீட்டை நீதிமன்றம்‌ ரத்து செய்திருப்பது வன்னிய சமூக மக்களுக்குப் பெரும்‌ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, இட ஒதுக்கீடு விவகாரத்தில்‌ வழங்கப்பட்ட தீர்ப்பை மறுபரீசிலனை செய்து, அனைத்துத் தரப்பு மக்களும்‌ பயனடையும்‌ வகையில்‌ தீர்ப்பு வழங்க வேண்டும்‌.” என விஜயகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.