பர்கர் கிங் நுகர்வோரை ஏமாற்றி வருவதாக மியாமி நீதிமன்றத்தில் வாடிக்கையாளர் ஒருவர் பர்கர் கிங்கிற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.
பிரபல துரித உணவு நிறுவனங்கள் சமீபத்தில் தவறான விளம்பரம் செய்ததாகக் கூறி சட்டரீதியான சவால்களை எதிர்கொண்டுள்ளன. இந்த ஆண்டு, டகோ பெல் அமெரிக்காவில் பீட்சா மற்றும் ரேப்களை விற்றதற்காக தவறான விளம்பரத்திற்காக வழக்குத் தொடரப்பட்டது. அந்த வகையில், பர்கர் கிங் ஸ்டோர் மெனு போர்டுகளில் பெரிய புகைப்படத்தை வைத்து வாடிக்கையாளர்களை கவர்ந்ததாக வழக்கு தொடரப்பட்டது.
ஆர்டர் செய்த பின் வாடிக்கையாளர்களுக்கு கடையில் உள்ள மெனு போர்டில் உள்ள புகைப்படத்தை விட சிறிய அளவிலான பர்கர் வழங்கப்பட்டு வாடிக்கையாளர்களை ஏமாற்றி வருவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
மெனு போர்டில் காட்டப்பட்ட புகைப்படம் பர்கரை 35% பெரியதாக காட்டியதாக வழக்கு தொடர்ந்தவர் கூறினார் . இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த பர்கர் கிங், புகைப்படத்தில் காணப்படும் சரியான பர்கர்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டிய அவசியமில்லை என்று கூறியுள்ளார்.
இந்த வழக்கில், நீதிபதி ராய் ஆல்ட்மேன், பர்கர் கிங் மீதான குற்றச்சாட்டுகளுக்கு அந்நிறுவனம் பதிலளிக்க வேண்டும் என்றார். குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என மறுக்க, கடையில் உள்ள மெனு போர்டில் காட்டப்படும் புகைப்படம் நுகர்வோரை தவறாக வழிநடத்தவில்லை என்பதை பர்கர் கிங் நிரூபிக்க வேண்டும் என்றும் அவர் உத்ரவிட்டுள்ளார்.








