500 கோடி ரூபாய் செலவில் 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில், அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப் பேரவை இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. தமிழ்நாடு அரசின் 2023-24ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். பள்ளி கல்வித் துறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்ட நிதியமைச்சர், முதலமைச்சரின் காலை உணவு திட்டமானது 500 கோடி ரூபாய் செலவில் 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்படும் என அறிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையும் படிக்க: மதுரை, கோவையிலும் மெட்ரோ ரயில் திட்டம் – பட்ஜெட்டில் அறிவிப்பு!
மேலும், பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம் தொடங்கப்படும். அரசுப் பள்ளிகளில் கட்டமைப்பை மேம்படுத்த வரும் நிதியாண்டில் 1,500 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும். எண்ணும் எழுத்தும் திட்டம் 110 கோடி ரூபாய் செலவில் விரிவுபடுத்தப்படும். 4 மற்றும் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுப்படுத்தப்படும். ஆதி திராவிடர், சீர்மரபினர், அறநிலையத் துறை உள்பட அனைத்து துறைகள் நடத்தும் அனைத்து பள்ளிகளும் பள்ளிக்கல்வி துறையின்கீழ் கொண்டுவரப்படும். அனைத்து ஆசிரியர்களும் சம பயன்கள் பெறுவார்கள்.
ரூ. 10 கோடி செலவில் இலக்கியத் திருவிழா, சர்வதேச புத்தகக் காட்சி இந்தாண்டும் நடைபெறும். மாணவர்களின் கல்வி உதவித் தொகைக்காக இணையதளம் அமைக்கப்படும். 3 லட்சம் புத்தகங்களுடன் மதுரை கலைஞர் நுாற்றாண்டு நூலகம் பயன்பாட்டுக்கு வரும். நான் முதல்வன் திட்டம் மூலம் 12.7 லட்சம் மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். ஒட்டுமொத்தமாக பள்ளி கல்வி துறைக்கு 40,290 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.
-ம.பவித்ரா