பார்டர் கவாஸ்கர் கடைசி டெஸ்ட் போட்டியில் 2ம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இந்த தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நேற்று தொடங்கியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்து வரும் ஆஸ்திரேலியா நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 255 ரன் எடுத்திருந்தது. அந்த அணியில் கவாஜா 251 பந்துகளில் 104 ரன்கள் எடுத்த நிலையிலும், கிரீன் 64 பந்துகளில் 8 பவுண்டரியுடன் 49 ரன்கள் எடுத்த நிலையிலும் களத்தில் இருந்தனர். தொடர்ந்து 2வது நாளான இன்று பேட்டிங் செய்த இந்த இணை இந்தியாவின் பந்து வீச்சை திறம்பட சமாளித்து ரன்களை திரட்டியது. நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கவாஜா 150 ரன்களை கடந்தார்.
இந்த போட்டியில் 23 வயதான கேமரூம் கிரீன் சர்வதேச போட்டியில் தனது முதலாவது சதத்தை பதிவு செய்தார். அவர் 114 ரன்கள் எடுத்த நிலையில், அஸ்வின் சுழல் வீச்சில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் அலெக்ஸ் கேரியும் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய ஸ்டார்க் 6 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இறுதியில் ஆஸ்திரேலிய அணி 167.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 480 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அஸ்வின் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளையும், ஷமி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது. இத்துடன் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் மட்டும், ஒரு இன்னிங்சில் 32வது முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அஸ்வின் சாதனை படைத்துள்ளார்.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ரோகித் சர்மா 17 ரன்னும், சுப்மன் கில் 18 ரன்னும் எடுத்த நிலையில், 2ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்திய அணி 2ம் நாள் முடிவில் 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் எடுத்துள்ளது. 444 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி நாளை 3ம் நாள் ஆட்டத்தில் தொடர்ந்து விளையாட உள்ளது.