தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் நடிகர் போண்டா மணியை காப்பாற்ற வேண்டுமென நடிகர் பெஞ்சமின் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை தமிழரான போண்டா மணி 1991ஆம் ஆண்டு பாக்யராஜ் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பிறகு சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். சுந்தரா டிராவல்ஸ், மருதமலை, வின்னர், வேலாயுதம் ஆகிய படங்கள் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்தார்.
குறிப்பாக வடிவேலுவுடன் சேர்ந்து இவர் செய்த லூட்டிகள் இன்றளவும் மீம் டெப்லேட்டுகளாக இணையத்தில் வலம் வந்த வண்ணம் உள்ளன. பெரிதாக எந்த பட வாய்ப்புகளும் இல்லாததால் தனியார் தொலைக்காட்சி கேம் ஷோவில் அவ்வப்போது கலந்து கொண்டார்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் நடிகர் போண்டா மணி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இப்படியிருக்க தற்போது அவரின் இரு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டதால் அவருக்கு உதவித் தேவைப்படுவதாக நடிகரும் போண்டா மணியின் நண்பருமான பெஞ்சமின் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டு கோரிக்கை வைத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் ‘ அண்ணன் போண்டா மணிக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டன. அவர் தற்போது சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் அவருக்கு மேல் சிகிச்சை தேவைப்படுவதால் இந்த காணொலியைப் பார்ப்பவர்கள் உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து பல்வேறு இன்னல்களையும் போராட்டங்களையும் தமிழ் சினிமாவில் நடிகனாகினார். திருமணம் செய்து கொண்ட இவருக்கு இரு குழந்தைகளை உள்ள நிலையில் தற்போது உடல்நிலை சரியில்லாமல் தவிக்கிறார். அவரை காப்பாற்ற உங்களால் முடிந்த அரசியல் தலைவர்களிடம் அல்லது உங்கள் நண்பர்களிடம் இவரின் நிலைகுறித்து கூறி அண்ணன் போண்டா மணியைக் காப்பாற்ற உதவுங்கள். இலங்கையிலிருந்து அனாதையாக வந்த இவர் அனாதையாகப் போகக் கூடாது” எனக் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார்







