”அறுதிப் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியமைக்கும்” – கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை நம்பிக்கை

பாஜக அறுதிப் பெரும்பான்மை வாக்குகளுடன் மிகப்பெரிய வெற்றியை பெற்று நிலையான ஆட்சி அமைக்கும் என்று தான் நம்புவதாக கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை நம்பிக்கை தெரிவித்துள்ளார். 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே…

பாஜக அறுதிப் பெரும்பான்மை வாக்குகளுடன் மிகப்பெரிய வெற்றியை பெற்று நிலையான ஆட்சி அமைக்கும் என்று தான் நம்புவதாக கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக கடந்த 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என மூன்று பெரும் கட்சிகளுக்கிடையே மும்முனை போட்டி நிலவிய நிலையில், மொத்தமாக 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர்.

கடந்த 10-ம் தேதி நடைபெற்ற தேர்தலில், 73.19 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள 36 வாக்கு எண்ணும் மையங்களில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

பெரும்பான்மையான தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியே முன்னிலை வகித்து வருகிறது. இருப்பினும் ஏற்ற இறக்கத்துடன் முன்னிலை நிலவரம் இருந்து வருகிறது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையின் முடிவில் பாஜகவே அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்று கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த பசவராஜ் பொம்மை, “இன்று பாஜகவுக்கு மிகப்பெரிய நாள். கர்நாடக மக்கள் இன்று தீர்ப்பு வழங்குகின்றனர். பாஜக அறுதிப் பெரும்பான்மை வாக்குகளுடன் மிகப்பெரிய வெற்றியை பெற்று நிலையான ஆட்சி அமைக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். வாக்கு எண்ணிக்கை அமைதியான முறையில் நடக்க அனைத்து கட்சியினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.