”பாஜக நிச்சயம் தோற்கடிக்கப்படும்“ – மும்பை எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

”பாஜக நிச்சயம் தோற்கடிக்கப்படும் “ என மும்பையில் நடைபெற்று வரும்  எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாட்னா, பெங்களூரு எதிர்க்கட்சிக் கூட்டத்தை தொடர்ந்து இந்த கூட்டணியின் மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் நேற்றும் இன்றும்…

”பாஜக நிச்சயம் தோற்கடிக்கப்படும் “ என மும்பையில் நடைபெற்று வரும்  எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பாட்னா, பெங்களூரு எதிர்க்கட்சிக் கூட்டத்தை தொடர்ந்து இந்த கூட்டணியின் மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் நேற்றும் இன்றும் மும்பையில் நடைபெறுகிறது. இந்தியா கூட்டணியில் 26 கட்சிகள் உள்ள நிலையில், 3வது ஆலோசனைக் கூட்டத்தில் மேலும் 2 கட்சிகள் இணையும் என தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் முதல் நாள் ஆலோசனை கூட்டம், நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி, தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்ட 28 கட்சிகளை சேர்ந்த 63 தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த வியூகம், கூட்டணி கட்சிகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு குழு அமைப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்தியா கூட்டணிக்கு என உருவாக்கப்பட்ட இலச்சினை லோகோ இன்று வெளியீடுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்று  2-வது நாளாக இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டம் தொடங்கியது.

இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சருமான  மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

பாட்னா, பெங்களூரு ஆகிய இரண்டு இடங்களைத் தொடர்ந்து, மூன்றாவது கூட்டமாக மும்பையில் இந்தக் கூட்டத்தை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி!

இந்தியாவைக் காக்கப் போகும் இந்த இந்தியா கூட்டணியானது கடந்த 3 மாதங்களாக மிகுந்த ஒற்றுமையுடனும் கட்டுக்கோப்புடனும் செயல்பட்டு வருகிறது. நமது கூட்டணியின் பலத்தை விட, ‘இந்தியா’ என்ற பெயரே பாரதீய ஜனதா கட்சிக்குப் பயத்தையும் காய்ச்சலையும் உண்டாக்கி விட்டது. அதனால்தான், நம் கூட்டணியைக் கொச்சைப்படுத்திப் பேசுவதையே பாஜகவினர் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

எதிர்க்கட்சிகள் ஒன்று சேரமாட்டார்கள்; ஒரே கூட்டத்தில் பிரிந்து விடுவார்கள் என பாஜக நினைத்தது. ஆனால், கூட்டணியாக இணைந்து – அதற்குப் பெயரும் சூட்டி மூன்றாவது ஆலோசனைக் கூட்டத்தை நடத்திவிட்டோம் என்பது நம்முடைய உறுதியைக் காட்டுகிறது. வெற்றிப் பாதையில் நாம் பயணித்து வருகிறோம் என்பதன் அடையாளம் இது.

பாஜக ஆட்சியை வீழ்த்தி மதச்சார்பற்ற ஜனநாயகச் சக்திகளின் அரசை மத்தியில் அமைப்பதே நமது அணியின் முழு முதல் நோக்கமாகும். பாஜகவைத் தனிமைப்படுத்தும் வகையில் பாஜகவுக்கு எதிரான கட்சிகளை முடிந்தவரை இந்த அணியில் சேர்த்தாக வேண்டும். இதனை மனதில் வைத்து அனைத்துத் தலைவர்களும் செயலாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நமது கூட்டணி, இந்தியா முழுமைக்குமான கூட்டணி என்பதால் இதற்கு ஒருங்கிணைப்புக் குழுவையும் குறைந்தபட்ச செயல் திட்டத்தையும் உடனடியாக உருவாக்க வேண்டும். இந்தியா கூட்டணியின் முகமாக அந்த அறிக்கைதான் அமையும். நமது நாட்டை பாஜக ஆட்சி பல்வேறு வகைகளில் சீரழித்துள்ளது. அதனை எப்படிச் சரிசெய்யப் போகிறோம் என்பதை நாட்டு மக்களுக்குச் சொல்வதற்கான அறிக்கையாக அது அமைய வேண்டும்.

ஒரு கட்சி ஆட்சி முடிந்து இன்னொரு கட்சியின் ஆட்சி என்பதாக இல்லாமல், எதேச்சாதிகார ஆட்சி முடிந்து, மக்களாட்சி மலரத் தேவையான கொள்கையின் மூலமாக மக்களிடையே நாம் நம்மை அடையாளப்படுத்த வேண்டும். நம்முடைய கூட்டணிக்கு இத்தகைய கொள்கைகள் தலைமை தாங்க வேண்டும்.

இந்திய ஜனநாயகத்தைக் காப்பாற்றுவது என்ற ஒற்றை இலக்கின் முன்பு, நிச்சயமாக பாஜக தோற்கடிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை. இந்தக் கூட்டணி வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறவும் அடுத்த ஆண்டு இந்தியாவுக்கான ஒளிமயமான ஆண்டாக அமையவும் இப்போதே எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.