சென்னையில் அரசு நிலத்தில் குடியிருப்பவர்களை அகற்றும் பணியினை கண்டித்து, பாமக நிர்வாகி ஒருவர் தீக்குளித்து உயிரிழப்புக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆர்.ஏ.புரம், கோவிந்தசாமி நகர் இளங்கோ தெருவில், அரசு நிலத்தில் குடியிருப்பவர்களை அகற்றும் பணி காவல்துறை பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தங்கள் வீடுகளை அகற்றுவதால் தாங்கள் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், வீடுகளை இடிக்கும் பணியினை கைவிட வேண்டும் என வலியுறுத்தி, பாட்டாளி மக்கள் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் கண்ணையன் என்பவர் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்து உயிரிழப்புக்கு முயன்றார். இதனால் அவரது உடல் முழுவதும் தீக்காயங்கள் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் கண்ணையனை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
கண்ணையன் உடல் முழுவதும் எரிந்ததால், 90 சதவீதம் வரை தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவரது நிலமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிர் பிழைப்பது கடினம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 60 வயதான கண்ணையன் வீடு கட்டுவதற்கான கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்து வருவதாகவும், அவருக்கு சக்தி என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
259 வீடுகளை அகற்றுவதை கண்டித்து தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, குடியிருப்புகளை இடிப்பதற்கு நகர்புற குடியிருப்பு நிலவுரிமைக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழக அரசின் இது போன்ற மக்கள் மீதான அடக்குமுறையை வண்மையாக கண்டிப்பதுடன் வீடுகள் இடிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். இடித்த வீடுகளை உடனடியாக கட்டித்தர வேண்டும் என்றும் நகர்புற குடியிருப்பு நிலவுரிமை கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.