தியாகத் திருநாள் பக்ரித் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில் இஸ்லாமிய மக்களுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டூள்ள வாழ்த்துச் செய்தியில், பரிவு, சகோதரத்துவம் மற்றும் இரக்கத்தின் உண்மையான உணர்வை வலுப்படுத்துவதன் மூலம், ஒரு குடும்பமாக, அமைதியான, இணக்கமான இந்தியாவை உருவாக்குவோம் என்று தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈட்டிய பொருளில் முதலில் ஏழைகள்; பிறகு நண்பர்கள்; அடுத்துதான் தங்களுக்கு” என்ற உயரிய கோட்பாட்டின் அடிப்படையில் அனைவருக்கும் பகிர்ந்தளித்து, மனிதநேயத்தை இஸ்லாமிய பெருமக்கள் வெளிப்படுத்துகிறார்கள் என்றும் கூறியுள்ளார். இஸ்லாமிய சமூகத்தினர் அனைவரும் பக்ரீத் திருநாளை கொண்டாடி அன்பை பரிமாறிக்கொள்ளவும், நபிகளார் காட்டிய வழியில் அனைவரிடத்தில் கருணை காட்டிடவும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஈகை குணம் அருட்கொடையாக உலகில் நிலவிட வேண்டும், விட்டுக்கொடுத்தலும், மத நல்லிணக்கமும், மனித நேயமும் தழைத்தோங்க வேண்டும் என்று கூறியுள்ளார். அனைவரது வாழ்விலும் வளமும், நலமும் பெருகிடவேண்டும் என்று மனதார வாழ்த்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஈத் பண்டிகை அன்பையும், தியாகத்தையும் விளக்கும் புனித பண்டிகையாகும். தியாகம் மற்றும் மனித குலத்துக்கு தன்னலமற்ற சேவையை வழங்கும் பாதையை பின்பற்ற இந்தப் பண்டிகை நம்மை ஊக்குவிக்கிறது என்று கூறியுள்ளார். இந்த நாளில், சமுதாயத்தில் பரஸ்பர சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்தை பரப்ப நாம் அனைவரும் உறுதி எடுத்துக்கொள்வோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.