டி-20 உலகக் கோப்பையில், பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
டி-20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. அபுதாபியில் நேற்று நடந்த போட்டியில் பாகிஸ்தான், நமிபியா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக முகமது ரிஸ்வானும் பாபர் அசாமும் களமிறங்கினர். இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.
பாபர் அசாம் 49 பந்துகளில் 70 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பஹார் ஜமான் 5 ரன்களில் வெளியேற, பின்னர் முகமது ஹபீஸ் வந்தார்.
அவரும் ரிஸ்வானும் இணைந்து அதிரடி சரவெடி நடத்தினர். இதனால் அந்த அணி, 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் சேர்த்தது. முகமது ரிஸ்வான் 50 பந்துகளில் 79 ரன்களும் ஹபீஸ் 16 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தனர்.
அடுத்து களமிறங்கிய நமிபியா அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்து, தோல்வி அடைந்தது. அந்த அணியில் அதிகப்பட்சமாக கிரேக் வில்லியம்ஸ் மட்டும் 40 ரன்கள் எடுத்தார்.
இதன் மூலம், தொடர்ந்து 4வது வெற்றியை பதிவு செய்துள்ள பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறி இருக்கிறது.








