அதிமுகவின் விதிமுறை மாற்றங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டதற்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு மீது தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் ஏற்பட்ட நிலையில், பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து நடைபெற்ற தேர்தலிலும் போட்டியின்றி இபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓபிஎஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த நிலையில் தேர்தல் ஆணையம் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை அங்கீகரித்து கடிதம் அனுப்பியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனை எதிர்த்து ராம்குமார் ஆதித்தன், கே.சி.சுரேன் பழனிசாமி ஆகியோர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அந்த மனுவில் அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் பொதுக்குழு தொடர்பான வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோது, தீர்மானங்களையும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டது தவறு என தெரிவித்துள்ளனர்.
அதேபோல பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகரித்ததும் தவறானது, எனவே இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி புருஷேந்திரகுமார் கவுரவ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை பரிசீலித்த நீதிபதி, ராம்குமார் ஆதித்தன் மற்றும் சுரேன் பழனிசாமி கோரிக்கை தொடர்பாக ஆறு வார காலத்திற்குள் பதில் அளிக்க இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் பிறப்பித்து வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையிலான அதிமுக கட்சி தொடர்பான வழக்கில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் அடிப்படையிலும் இந்த விவகாரங்களில் நீதிமன்றத்தின் தீர்ப்பு தான் இறுதி முடிவு என்பதையும் தாங்கள் தெளிவாக புரிந்து வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.