அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் ரூ. 9 ஆயிரம் கோடி மதிப்பிலான சுமார் 18 டன் அளவுக்கு தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தங்க நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
சித்திரை மாதத்தில் அமாவாசைக்குப் பிறகு வரும் 3வது திருதியையான வளர்பிறை திருதியை அட்சய திருதியை ஆகும். இந்நன்னாளில் சிறியளவு தங்க நகை வாங்கினால்கூட ஆண்டு முழுவதும் செல்வச் செழிப்பாக வாழலாம் என்பது நம்பிக்கை.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நகைக் கடைகள் அட்சய திருதியை நாளில் மூடப்பட்டிருந்தன. இதனால், பொதுமக்கள் தங்கம் வாங்க முடியாமல் சிரமத்துக்குள்ளாகினர். இந்நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், அனைத்துக் கடைகளும் முழு அளவில் திறக்கப்பட்டன.
இந்நிலையில், இந்த ஆண்டு அட்சய திருதியை முன்னிட்டு அனைத்து நகைக் கடைகளிலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
இதுகுறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் செல்லானி கூறுகையில், அட்சயதிருதியை நாளில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை பொதுமக்கள் நகைகளை வாங்க வந்து கொண்டே இருந்தனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 30 சதவீதம் வரை விற்பனை அதிகரித்துக் காணப்பட்டது என்றார்.
தங்க நகை வியாபாரிகள் கூறுகையில், கடந்த ஆண்டைவிட பவுனுக்கு 2,400 ரூபாய் கூடியிருந்தாலும் மக்கள் ஆர்வத்துடன் நகைகளை வாங்கிச் சென்றனர். தமிழகம் முழுவதும் 17 டன் தங்கம் விற்பனையாகும் என எதிர்பார்த்திருந்த நிலையில், 18 டன்னுக்கும் மேல் விற்பனையானது. சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் விற்பனையாகின என்றனர்.