சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முன்னதாக திமுக தனது தேர்தல் அறிக்கையில் சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என தெரிவித்தது. இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து அறிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளிப்படையான அரசு நிர்வாகம், பங்கேற்பு ஜனநாயகம் ஆகியவற்றை மக்கள் நீதி மய்யம் தொடங்கிய நாளில் இருந்தே வலியுறுத்தி வருகிறோம். சட்டமன்ற நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்வது, பொதுப் பிரச்னைகளின் மீது மக்கள் பிரதிநிதிகள் நிகழ்த்தும் விவாதங்களை, பொதுமக்கள் அறிந்துகொள்ள உதவும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் சட்டமன்ற நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்வோம் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. நேரடி ஒளிபரப்பு செய்வதன் மூலம், சட்டமன்றத்தில் ஊடகவியலாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் எண்ணிக்கையை குறைக்க உதவும். நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே நேரடி ஒளிபரப்பு செய்ய ஆவன செய்ய வேண்டும் என கமல்ஹாசன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







