விபத்துக்குள்ளான ஒடிசா ரயிலிலிருந்து 48மணி நேரத்திற்கு பின் உயிரோடு மீட்கப்பட்ட அசாம் வாலிபர் புவனேஷ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்களை இணைக்கும் விதமாக இதன் வழித்தடம் அமைந்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கடந்த 2ம் தேதி மாலை 3:30 வழக்கம் போல மேற்கு வங்க மாநிலம் சாலிமரிலிருந்து புறப்பட்டது. இந்த ரயில் மேற்கு வங்க மாநிலத்தை கடந்து ஒடிசாவின் பஹனகா ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருக்கும் போது சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தின்போது ரயில் நேருக்கு நேர் மோதியதில் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டன. அப்போது பெங்களூருவில் இருந்து ஹவுரா சென்ற ரயில் தடம்புரண்டு கிடந்த பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த கோர விபத்தில் 301 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் 900பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இரண்டு ரயில் பாதைகளில் சீரமைப்பு பணி நிறைவடைந்ததால், இரு வழித் தடத்திலும் ரயில்கள் இயக்கப்பட்டன. விபத்து நிகழ்ந்த 51 மணி நேரத்தில் ரயில் போக்குவரத்து சீரடைந்ததாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். உயிரிழந்தவர்களுக்கு மத்திய அரசு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது. மேலும் ஒடிசா, மேற்கு வங்கம், ஆந்திரா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களும் நிவாரணங்கள் அறிவித்துள்ளன.
ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. கட்டாக் ரயில்வே காவல்துறையின் உதவி ஆய்வாளர் பப்பு குமார் நாயக் கொடுத்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். இந்திய தண்டனை சட்டம் பிரிவு 337, 338, 304 A, 34 மற்றும் ரயில்வே சட்டம் 153, 154, 175 ஆகிய பிரிவுகளில் முதல் தகவல் அறிக்கையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் அடையாளம் காணப்படாமல் 101 உடல்கள் உள்ளதாக தகவல் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
விபத்துக்குள்ளான இடத்தில் சீரமைப்பு பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகின்றன. ஒடிசா மாநிலத்தின் சோரோ காவல்நிலையத்தை சார்ந்த காவலர்கள் சிலர் சீரமைப்பு பணிகள் நடைபெறும் இடத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது தீடீரென விபத்துக்குள்ளான ரயிலில் இருந்து முனகல் சப்தம் கேட்டு அதிர்ச்சியடைந்து சப்தம் வந்த இடத்திற்கு சென்று பார்த்தனர்.
அப்போது ஒரு வாலிபர் நொறுங்கிக் கிடந்த ரயிலுக்கு அடியில் இருந்து அரை மயக்கத்துடன் மீட்கப்பட்டார். அவரை மீட்ட காவல்துறையினர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவரை புவனேஷ்வர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
மருத்துவமனை சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது பெயர் தலால் மஜும்தார் என்பதும் அவர் அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர் தனது ஐந்து நண்பர்களுடன் கோரமண்டல் ரயிலில் பயணம் செய்துள்ளார். அவரோடு வந்த மற்ற நபர்களின் நிலை என்ன என்பது குறித்து போதிய தகவல்கள் இல்லை.
48 மணி நேரமாக நொறுங்கிய ரயிலுக்கு அடியில் தண்ணீர் , காற்றோட்டம், உணவு இன்றி எப்படி அவர் உயிரோடு இருந்தார் என மருத்துவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் ஆச்சர்யத்தோடு பார்க்கின்றனர்.