திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை கிராம தேயிலை தோட்ட பகுதியில் முகாமிட்டுள்ள அரிக்கொம்பன் யானை ரேடார் கருவி இணைப்பு கிடைக்காததால் சுமார் 80 கொண்ட வனத்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேரள மாநிலத்திலும், தேனி மாவட்டத்திலும் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து அச்சுறுத்திய அரிக்கொம்பன் யானை மயக்க ஊசி மூலமாக பிடிக்கப்பட்டது. பின்னர் நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலையில் கோதையாறு அணை அருகே கடந்த ஜூன் 5- ந்தேதி விடப்பட்டது.
பின்னர் அரிக்கொம்பன் யானையின் கழுத்திலுள்ள ரேடார் கருவி மூலம், அதன் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் ஓரிரு தினங்களுக்கு முன் மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள மாஞ்சோலை தேயிலை தோட்ட வனப்பகுதியில் அரிக்கொம்பன் யானை நடமாடியுள்ளது.
தொடர்ந்து நாலுமுக்கு தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் புகுந்த அரிக்கொம்பன் சவுந்தரியா என்ற தொழிலாளியின் வீட்டில் இருந்த வாழை மரங்களை யானை சாய்த்து, வாழைத்தார்களை தின்று சேதப்படுத்தியுள்ளது. மேலும் ஊத்து பகுதியிலுள்ள வரதன் என்பவரது வீட்டின் கதவை தள்ளி மேற்கூரையை சேதப்படுத்தியுள்ளது,
அதிர்ஷ்டவசமாக வீட்டில் யாரும் இல்லாததால் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. நேற்று அதிகாலை ஊத்து எஸ்டேட் பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் அருகே அரிக்கொம்பன் நிற்பதை வனத்துறையினர் அறிந்தனர்.
இதனிடையே அரிக்கொம்பனின் கழுத்தில் உள்ள ரேடார் இணைப்பு சரியாக கிடைக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அம்பை, களக்காடு வனக்கோட்டங்களை சேர்ந்த சுமார் 80 -க்கும் மேற்பட்ட வனத்துறையினர் அரிக்கொம்பனை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.







