டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவி உள்ளிட்ட 10 உறுப்பினர்கள் பதவிகளுக்கான பெயர்களை தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்துள்ள நிலையில், அதற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசு துறைகளுக்கு தேவையான பணியாளர்களை நியமனம் செய்வதில் முக்கிய பங்காற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், நிரந்தர தலைவர் மற்றும் போதிய உறுப்பினர்கள் இல்லாமல் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அரசு துறைகளுக்கு தேவையான அலுவலர்கள் பணியாளர்களை தேர்வு செய்யும் முக்கிய பணியை டிஎன்பிஎஸ்சி செய்து வருகிறது. இந்த அமைப்பில் தலைவர் மற்றும் 13 உறுப்பினர்கள் பணியாற்ற வேண்டும். ஆனால் பல மாதங்களாக சில உறுப்பினர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பதவிக்கு சைலேந்திரபாபு மற்றும் 10 உறுப்பினர் பதவிகளுக்கு தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்து ஆளுநருக்கு அனுப்பியது. ஆனால் அரசின் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்காமல் ஒரு மாதமாக ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சில கேள்விகளை ஆளுநர் எழுப்பியதாகவும், அதற்கு தமிழ்நாடு அரசு தரப்பில் விளக்கம் அளித்துள்ளதாகவும் தெரிகிறது.







