போராட்டகாரர்கள் அதிகளவில் கைது செய்யப்படுவது மற்றும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் சிலரை தடுத்து வைத்துள்ளது என்பன மிகவும் கவலைக்குரிய விஷயங்கள் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூரியா தெரிவித்துள்ளார்.
நாடு தற்போது மெதுவாக பழைமையான நிலைமைக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றது எனவும் பின்நோக்கி செல்லாமல் முன்நோக்கி செல்ல வேண்டிய காலம் இது எனவும் சனத் ஜெயசூரியா கூறியுள்ளார்.
தவறு செய்தால் மன்னிப்பது மனித தன்மை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் 9 ஆம் தேதி முதல் கடந்த ஜூலை 9 ஆம் தேதி வரை நாட்டில் நடந்து வந்த மிகப் பெரிய எதிர்ப்பு போராட்டங்களில் கலந்துக்கொண்டவர்கள் பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள் தொடர்பாக தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் கடும் எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் உணவு பொருட்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். பொதுமக்களின் போராட்டத்தில் பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சேவும், அதிபர் பதவியை கோத்தபய ராஜபக்சேவும் ராஜிநாமா செய்தனர். புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றுள்ளார்.








