முன்னாள் அமைச்சர் காமராஜ் வருமானத்திற்கு அதிகமாக 58 கோடி ரூபாய் சொத்து சேர்த்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முந்தைய அதிமுக ஆட்சியில் உணவுத் துறை அமைச்சராக இருந்த காமராஜ் மற்றும் அவருக்கு தொடர்புடைய 49 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக சென்னையில் அடையாறு, மயிலாப்பூர், போயஸ் கார்டன் உட்பட 6 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
2021ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சி காலத்தில் உணவுத்துறை அமைச்சராக இருந்து வந்த காமராஜ், கூடுதல் பொறுப்பாக ஒரு வருடம் இந்து சமய அறநிலைய துறை அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார்.
2015-2021 ஆம் ஆண்டு பதவி வகித்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக முன்னாள் காமராஜ், அவரது மகன்கள் இனியன், இன்பன் மற்றும் அவரது நண்பர்கள் சந்திரசேகரன், உதயகுமார், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட ஆறு பேர் மீது திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
குறிப்பாக முன்னாள் அமைச்சர் காமராஜ் தான் முறைகேடாக சம்பாதித்த தொகையை அவரது நண்பர்கள் உதயகுமார், கிருஷ்ணமூர்த்தி மற்றும் சந்திரசேகர் மூலமாக சொத்துக்களை குவித்திருப்பதாகவும் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 2007ஆம் ஆண்டு சட்டவிரோதமாக அவரது நண்பர்கள் மூலமாக தஞ்சாவூரில் உள்ள NARC ஹோட்டல் பிரைவேட் லிமிடெட் என்ற சொத்துக்களை வாங்கி கட்டுமான தொழில் செய்த வருமானத்தை மறைத்திருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாகவும், தனது மகன்கள் நடத்தும் வாசுதேச பெருமாள் ஹெல்த் கேர் என்ற நிறுவனத்தை முறைகேடாக வாங்கி நடத்தி வருவதும் கண்டுபிடித்துள்ளதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர். சுமார் 27கோடியே 25லட்சத்து 8350 ரூபாய் வரை முறைகேடாக சம்பாதித்த பணத்தை வைத்து காமராஜ் சொத்துக்கள் குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை தெரிவித்துள்ளது.
குறிப்பாக கடந்த 2015ஆம் ஆண்டு காமராஜ், குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர்கள் பெயரில் இருந்த சொத்துகளின் மதிப்பு ஒரு கோடியே, 39 லட்சத்து 54 ஆயிரத்து 290 ரூபாய். ஆனால் 2021ஆம் ஆண்டு முடிவில் 60 கோடியே 24லட்சத்து 50 ஆயிரத்து 39 ரூபாய் அளவாக சொத்துக்கள் உயர்ந்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதை வைத்து பார்க்கும் போது முன்னாள் அமைச்சர் காமராஜ் மற்றும் அவரது நண்பர்கள் பெயரில் வருமானத்திற்கு அதிகமாக 58 கோடியே 84லட்சத்து 50ஆயிரத்து 879 ரூபாய் சொத்துகள் குவித்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.