செப்டம்பர் 1ம் தேதி முதல் அங்கன்வாடி மையங்கள் திறக்கப்பட உள்ளதையடுத்து தமிழ்நாடு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருவதையடுத்து அங்கன்வாடி மையங்களை திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, அங்கன்வாடி மையத்திற்குள் பணியாளர்கள் நுழையும் போது கைகளை சோப்பு கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்றும் பணியாளர்கள் கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 வயது முதல் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சூடான உணவு வழங்க வேண்டும். காலை 11.30 முதல் 12.30 மணி வரை அங்கன்வாடிகளிலேயே மதிய உணவை வழங்கிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அங்கன்வாடி பணியாளர்கள் விரல்களில் நகப்பூச்சு பயன்படுத்தக்கூடாது என கூறப்பட்டுள்ளது.
மேலும் பணியாளர்கள் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்றும் வாரத்தில் ஞாயிறு தவிர 6 நாட்களுக்கு மதிய உணவு வழங்குவது கட்டாயம் என தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.







