பொங்கல் பண்டிகை வேட்டி,  சேலை திட்டத்திற்கு முன்பணம் ரூ.200 கோடி ஒதுக்கீடு – அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு..!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வேட்டி,  சேலை வழங்கும் திட்டத்திற்காக ரூ.200 கோடி முன்பணமாக ஒதுக்கீடு செய்யப்பட்டதற்காக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், எதிர்வரும் பொங்கல் (2024)ஆண்டு வேட்டி சேலை வழங்கும்…

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வேட்டி,  சேலை வழங்கும் திட்டத்திற்காக ரூ.200 கோடி முன்பணமாக ஒதுக்கீடு செய்யப்பட்டதற்காக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், எதிர்வரும் பொங்கல் (2024)ஆண்டு வேட்டி சேலை வழங்கும் திட்டத்திற்காக 1,68,00,000 எண்ணிக்கையிலான  சேலைகள் மற்றும் 1,63,00,000 வேட்டிகளை உத்தேச உற்பத்தி திட்ட இலக்காக நிர்ணயம் செய்து வழங்கிட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொது மக்களுக்கு வேட்டி, சேலையினை விநியோகிக்கும் நடைமுறையை முடிவு செய்ய ஏதுவாக, கூடுதல் தலைமைச் செயலாளர், வருவாய்த் துறை தலைமையில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர், வருவாய்த் துறை மற்றும் கைத்தறி ஆணையர் ஆகியோர் அடங்கிய குழுவினை அமைக்க உத்தரவிடப்படுகிறது.
வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் வேட்டி  சேலைகள் பயனாளிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்ய, நியாய விலைக் கடைகளின் (Ration Shop) விற்பனை முனையத்தில் (Polnt of Sale Machine) வேட்டி சேலைகளை வழங்கும்போது விரல் ரேகை பதிவு (Bio metric Authentication) கட்டாயமாக்கப்படுகிறது.
இதனைத் தவறாது செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு வருவாய் மற்றும்  பேரிடர் மேலாண்மைத் துறை மற்றும் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆணையர், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிடப்படுகிறது என அரசாணையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.