இந்திய தொல்லியல் துறையினர் ஞானவாபி மசூதியில் அறிவியல்பூர்வ ஆய்வை நடத்த அலகாபாத் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் அருகே ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. இந்த மசூதி வளாகத்தின் சுவரில் சிங்கார கவுரி அம்மன் சிலை இருப்பதாகவும் அதை தினமும் வழிபட அனுமதிக்கும்படியும் கோரி 5 பெண்கள் சார்பில் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து, ஞானவாபி மசூதியில் வீடியோ ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து அஞ்சுமன் இன்டெஜமியா மஸ்ஜித் கமிட்டி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில், வாரணாசி மாவட்ட நீதிமன்றமே வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஞானவாபி மசூதியில் அறிவியல்பூர்வமான ஆய்வுகளை மேற்கொள்ள இந்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டது.
மேலும் இந்த ஆய்வு நடத்தும் போது புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவு செய்து அதனை ஆகஸ்ட் 4-ம் தேதிக்குள் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து இந்திய தொல்லியல் துறையினர் வாரணாசிக்கு சென்று மசூதியில் ஆய்வுப் பணிகளை தொடங்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். மசூதியில் ஆய்வுப் பணிகள் தொடங்கவிருந்த நிலையில், உச்ச நீதிமன்றம் அதற்கு இடைக்கால தடை விதித்தது.
மேலும் ஞானவாபி மசூதியில், ஜூலை 26-ம் தேதி வரை தொல்லியல் துறையின் அறிவியல்பூர்வமான ஆய்வை நடத்தக் கூடாது என்றும், அதுவரை அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவு நிறுத்திவைக்கப்படுவதாகவும், அதற்குள், மசூதி நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
ஞானவாபி மசூதி வளாகத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்துவது தொடர்பான வாராணாசி மாவட்ட நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தை நாடுமாறு ஞானவாபி மசூ நிர்வாகக் குழுவை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதையடுத்து, ஞானவாபி மசூதி கமிட்டி சார்பில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை ஜூலை 26, 27 ஆகிய தேதிகளில் விசாரித்த நீதிமன்றம், தீர்ப்பை ஆகஸ்ட் 3-ம் தேதிக்கு தள்ளி வைத்தது. மேலும், ஆகஸ்ட் 3-ம் தேதி வரை தொல்லியல் ஆய்வுக்கும் அலகாபாத் உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது.
அதன்படி, இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், ஞானவாபி மசூதியில் தொல்லியல் ஆய்வு தொடர்பான வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தில் ஆய்வு நடத்த இந்திய தொல்லியல் துறைக்கு அனுமதி அளித்துள்ளது.







