வாக்குறுதி அளித்தபடி அனைத்து பெண்களுக்கும் ரூ1000 கொடுக்க வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோவை, விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது:
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
“கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறப்பது நல்ல விஷயம், அது ஒரு அறிவு சார்ந்த விஷயம் என்பதால் வரவேற்கத்தக்க விஷயம். அனைத்து ஊர்களில் திறந்தாலும் நல்லது தான். மகளிர் உரிமை திட்டத்தைப் பொருத்தவரை திமுக தேர்தலுக்கு முன்பு அனைத்து பெண்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்து தேர்தலில் வெற்றி பெற்றார்கள்.
ஆனால், ஆட்சியில் தகுதியான பெண்களுக்கு மட்டும்தான் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று கூறுவது கண்டிக்கக் கூடிய விஷயம். தேர்தலுக்கு முன்பு கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதுதான் நல்ல அரசுக்கு அடையாளம். எனவே, வாக்குறுதி அளித்தபடி அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ1000 கட்டாயம் வழங்க வேண்டும்.
மக்களவைத் தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தைப் பொருத்தவரை எங்களுடைய பணிகளை நாங்கள் செய்து வருகிறோம். அனைத்து மாவட்டங்களிலும் எங்களுடைய உட்கட்சித் தேர்தல் முடிந்து விட்டது. இதற்கு அடுத்த செயற்குழு, பொதுக்குழு உள்ளிட்டவற்றை தலைமை கழகம் விரைவில் அறிவிக்கும்.
இந்தியா முழுவதும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று எண்ணினாலும் அந்த கட்சிகளுக்குள்ளேயே பல்வேறு வேறுபாடுகள் உள்ளது. எனவே, இறுதியில் மக்கள் எந்த கூட்டணியை ஏற்றுக் கொள்கிறார்கள், யார் ஜெயிக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்” என்றார்.