சட்டப்பேரவையில் பேச வாய்ப்பளிக்காததால் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று காலை பேரவை கூடியதும் நேரமில்லா நேரத்தில் பேச அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி சட்டப்பேரவையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவையில் முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் குறித்து பேரவையில் பேச கே.பி.முனுசாமி முயற்சித்தார். ஆனால், அவருக்கு பேச அனுமதி அளிக்கவில்லை. மேலும், பெண்கள் உரிய நேரத்தில் வேலைக்கு சென்று வீடு திரும்ப உதவியாக அதிமுக அரசால் தொடங்கி வைக்கப்பட இரு சக்கர வாகன திட்டத்தை இந்த அரசு கைவிட்டு விட்டது இவற்றைக் கண்டித்து வெளிநடப்பு செய்தோம் என தெரிவித்தார்.
தொடர்ந்துபேசிய அவர், காமராஜர் சாலையில் அமைக்கப்பட்ட ஜெயலலிதாவின் சிலைக்கு தொடர்ந்து மாலை அணிவித்து வந்தோம். தற்போது அங்கிருந்த ஏணியை அகற்றி உள்ளனர். தொடர்ந்து அங்கு மாலை அணவிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்து அந்த திட்டதை சீர்குலைக்கும் முயற்சியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டுள்ளது. ஜெயலலிதா பெயரில் ஆரம்பிக்கப்பட்ட பல்கலைகழகத்தையும் அவர்கள் முடக்கி உள்ளனர் என தெரிவித்தார்.




