லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் come back கொடுக்கிறார் எனும் செய்தியே கமல் ரசிகர்களுக்கு மூக்கை முட்டும் அளவுக்கு விருந்து வைத்தது. இசை ரவுடி அனிருத் இசையமைக்கிறார் என்று கேட்டதுமே அவர்கள் அந்தரத்தில் பறக்கத்தொடக்கினர். இந்நிலையில் துப்பாக்கிகளை அறைமுழுக்க குவித்து, கும்பலாக பலரை அழைத்து வந்து அவர்களுக்கு விருந்து வைத்து கோடாரியை எடுத்து உலகநாயகன் திரையில் வீசும் காட்சிகளை பார்த்த கமல் ரசிகர்கள், எம்.ஜி.ஆர் படத்தை பார்த்து அருவாவை எடுத்து டிவியில் வீசிய வடிவேல் போல் துள்ளிக் குதிக்கத் தொடங்கினர். இதனைத்தொடர்ந்து படத்தின் மேக்கிங் வீடியோ,படப்பிடிப்பு முடிக்கும் வீடியோ என அடுத்தடுத்த அப்டேட்டுகளை விட்டு கமல் ரசிகர்களை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் அலறவிட்டனர்.
இத்தனை Swag-களுக்கு பின்னும் ‘பத்தல பத்தல’ என்று லோகேஷ் கனகராஜ் நினைத்தாரோ தெரியவில்லை. அனிருத் இசையில் உலகநாயகனே ஒரு பாடலை எழுதிப் பாடுகிறார் என்றும் அந்த பாடலின் பெயரே ‘பத்தல பத்தல’ என்றும் அடுத்த அப்டேட்டை இணையத்தில் கொளுத்தி போட்டனர். இன்று மாலை 7 மணிக்கு பாடல் வெளியாகும் நிலையில் அதற்கான போஸ்டரை உலகநாயகன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். கூலர்ஸுடன் சட்டையை கழட்டு தோளில் கட்டிக்கொண்டு மீசையை முறுக்கி மிடுக்காக கமல் நடனமாடுவது போலான அந்த போஸ்டரை பார்த்த தமிழ் சினிமா ரசிகர்கள்,அடடே! உலகநாயகனை இப்படி பாத்து எம்புட்டு வருஷமாச்சி! என இணையத்தை தெறிக்கவிடுகின்றனர்.
80-களிலும், 90-களிலும் கமல் பாடல்கள் என்றாலே ரகளையாக இருக்கும். ‘அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ..ஒத்திக்கோ!’ வில் ராஜாவின் மஜாவான பாடலுக்கான கமலின் ஒவ்வொரு அசைவுகளும் இன்று வரை இளைஞர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ‘சிங்காரி சரக்கு நல்ல சரக்கு’ பாடல் கமல் போடும் ஜிம்னாஸ்டிக் ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க அந்தகால உச்சநட்சத்திரங்களில் ஆளே இல்லை எனலாம்.
‘மாருகோ மாருகோ’ பாடலில், ‘அடி சம்பா சம்பா..அடி ரம்பா ரம்பா’ என தனக்கே உரிய ஸ்டைலில் துள்ளி குதிக்கும் கமலை எப்படி ரசிக்காமல் இருக்க முடியும். உலகமே பார்க்கும் ஒரு மேடையில் நின்றுகொண்டு‘இளையராஜா என்ன விட கமலுக்குத்தான் நல்ல பாட்டு போடுவாரு’ என்று சூப்பர் ஸ்டார் ரஜினியே கம்ப்ளைண்ட் பண்ணும் அளவுக்கு கமலுக்கான ஒவ்வொரு பாடலையும் கொளுத்தி எடுத்திருப்பார் இளையராஜா. ‘இதையேதான் கமலும் எங்கிட்ட கம்ப்ளைண்ட் பன்றாரு’ என பதில் கொடுத்திருப்பார் இளையராஜா.
நிற்க, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஏற்கனவே பேட்டை, தர்பாரில் துவைத்து எடுத்திருப்பார் அனிருத். இப்போது கமலுக்காக களத்தில் இறங்கி ஆடும் அனி, நிச்சயம் அவரின் ரசிகர்களின் நாடி நரம்புகளையெல்லாம் பதம் பார்த்துவிடுவார் என்றே நம்பப்படுகிறது. ‘இசைஞானி’ இளையராஜாவிடம் அவரது இசைக்காக ரஜினியும், கமலும் சண்டை போட்டது போலவே ‘இசை ரவுடி’ அனிருத்தின் இசைக்காவும் இருவரும் உரிமையாக சண்டையிட்டுக் கொண்டால் கூட ஆச்சரியம் இல்லை என்றே கணிக்கப்படுகிறது. அந்த கால இசை ரவுடி இளையராஜா, வரும்கால இசை விஞ்ஞானி அனிருத் என்று இதைத்தான் நாம் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம்.
இளையராஜா இசையினை தாண்டி கமல் தன் குரலில் பாடி ஆடிய பாடல்களும் நம்முடைய ஹார்ட்டின்களை அள்ளிவிடும். நடனத்தை தாண்டி கமலின் பாடல்களில் எப்பொழுதும் ஒரு ட்ராமா நிகழும். கார்த்திக் ராஜா இசையில் ‘காசு மேலே காசு வந்து’ பாடலுக்கு பிரபுதேவாவுடன் கமல் அடிக்கும் லூட்டிகள் அனைத்தும் 2k தலைமுறை நடிகர்களுக்கே டஃப் கொடுப்பவை. இப்போது அனிருத் இசையில் எழுதிப்பாடி ஆடுகிறார் கமல். இசைக்கோர்ப்புகள் அனைத்தும் தரமாக வந்திருப்பதாக அனிருத்தை பாராட்டி தீர்த்திருக்கிறார் கமல்! பிறகென்ன? வருது வருது.. விலகு விலகு..! வேங்கை வெளியே வருது!








