ஒற்றை தலைமையா, இரட்டை தலைமையா என்கிற சர்ச்சை ஒருபுறம் சென்று கொண்டிருக்க மறுபுறம் அதிமுக பொதுக் குழுவிற்கான ஏற்பாடுகளும் மும்முரமாகியுள்ளன.
அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு வரும் 23ஆம் தேதி சென்னை மதுரவாயலை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவில் ஒற்றை தலைமையை கொண்டு வருவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியானதையடுத்து அக்கட்சியில் சர்ச்சைகள் சூழ்ந்தன. இந்த விவகாரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடிபழனிசாமி ஆகிய இரு தரப்பிற்கிடையே மனக்கசப்பு நிலவி வருகிறது. கடந்த சில நாட்களாக இரு தலைவர்களின் வீடுகளிலும் அவர்களின் ஆதரவாளர்கள் குவிந்து ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த சர்ச்சைகளுக்கிடையே அதிமுக பொதுக் குழு திட்டமிட்டபடி வரும் 23ந்தேதி நடைபெறுமா அல்லது தள்ளிப்போகுமா என்கிற விவாதமும் எழுந்தது. இந்நிலையில் பொதுக்குழு திட்டமிட்டபடி நடைபெறும் என உறுதிபட கூறியுள்ளார் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி. பொதுக் குழு நடைபெறும் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில், கே.பி.முனுசாமி தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன், பெஞ்சமின், திண்டுக்கல் சீனிவாசன், சிவி சண்முகம் உள்ளிட்டோர் இன்று ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கே.பி.முனுசாமி வரும் 23ந்தேதி அதிமுக பொதுக் குழு கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்றார். ஒருங்கிணைப்பாளர் ஓபன்னீர்செல்வம் ஒப்புதலோடுதான் இந்தக் கூட்டம் நடைபெறும் எனக் கூறிய அவர்,
பொதுக்குழுவில் கொண்டு வரப்பட உள்ள தீர்மானங்கள் குறித்த கமிட்டி கூட்டத்தில்
ஓ. பன்னீர்செல்வம் கலந்துகொண்டு கையெழுத்திட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த பொதுக்குழுவில் ஓபிஎஸ், இ.பி எஸ் ஆகிய இருவம் கலந்து கொள்வார்கள் என்று கூறிய கே.பி.முனுசாமி, அவர்கள் முன்னிலையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்றார். அந்த தீர்மானங்களை அதிமுகவினர் அனைவரும் ஏற்றுகொள்வார்கள் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். பொதுக்குழுவை திட்டமிட்ட குறித்த நேரத்தில் நடத்த வேண்டும் என 2000 பொதுக் குழு உறுப்பினர்கள் கடிதம் எழுதியதாகவும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி சுட்டிக்காட்டினார்.