அதிமுக பொதுக்குழு வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை வரும் திங்கட்கிழமைக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.  கடந்த ஜூலை 11ந்தேதி சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் அக்கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த பொதுக்குழுவை எதிர்த்து…

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை வரும் திங்கட்கிழமைக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 

கடந்த ஜூலை 11ந்தேதி சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் அக்கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த பொதுக்குழுவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஜூலை 11ந்தேதி பொதுக்குழு செல்லாது என தனி நீதிபதி உத்தரவு அளித்த நிலையில் அதனை எதிர்த்து இபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை இருநீதிபதிகள் அமர்வு விசாரித்தது.  ஜூலை 11ந்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என அந்த அமர்வு தீர்ப்பளித்தது.

இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பிலும் அவரது ஆதரவாளர் வைரமுத்து தரப்பிலும் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள்தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்துவதற்கு இடைக்கால தடை விதித்தது.

இதையடுத்து முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், தரப்பில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, சுதான்சு துலியா அடங்கிய அமர்வு முன்பு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது  தங்கள் தரப்பில் ஆஜராக வேண்டிய மூத்த வழக்கறிஞர் உடல் நலம் சரியில்லாமல் உள்ளதால் வழக்கை வேறு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என வைரமுத்து தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது.

 

அப்போது வைரமுத்து ஓபிஎஸ் ஆதரவாளர் என்பதால் அவரது கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என இபிஎஸ் தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது.  ”இந்த வழக்கு நிலுவையில் உள்ளதை காரணம் காட்டி தேர்தல் ஆணையம், கட்சி விதிகள் மாற்றப்பட்டதை பதிவேற்றம் செய்யாமல் உள்ளது, மேலும் கட்சி பணிகளில் தொய்வு ஏற்படுகிறது எனவே இந்த விவகாரத்தில் ஒரு தீர்வு ஏற்படுத்த வேண்டும், குறைந்தபட்சம் இடைக்கால நிவாரணத்துக்காக ஒரு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” எனவும் இபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் எடுத்துரைக்கப்பட்டது.

இதையடுத்து வைரமுத்து தரப்பு கோரிக்கையை ஏற்று வழக்கை வரும் திங்கட் கிழமைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். வழக்கு தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டால் உங்கள் இரு தரப்புக்கும் பிரச்சனைதானே என்று கூறிய நீதிபதிகள், இதற்குமேலும் இதுபோன்று ஒத்திவைக்க கோரிக்கை வைத்து எங்களையும் சங்கடத்துக்கு ஆளாக்காதார்கள் என நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும் இபிஎஸ் தரப்பு இடைக்கால நிவாரணம் கோரி கூடுதல் இடைக்கால மனு தாக்கல் செய்ய அனுமதித்த நீதிபதிகள்,  அவ்வாறு தாக்கல் செய்யும் இடைக்கால மனுவை எதிர்தரப்புக்கு வழங்கவும் உத்தரவிட்டனர்.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.