அன்று போஃபர்ஸ் பீரங்கி ராஜீவ் காந்தியைத் தோற்கடித்தது போன்று, அதானி விவகாரம் பாஜகவை படுமோசமாக வீழ்த்தும் என திமுக நாளேடான முரசொலி விமர்சித்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற ஆய்வு நிறுவனம், அதானி குழுமம் மீது அண்மையில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தது. அதனால், அந்த குழுமத்தின் மதிப்பு இரண்டே நாட்களில் 4 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக சரிந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுகுறித்து திமுக நாளேடான முரசொலி வெளியிட்டுள்ள செய்தியில் அதானி குழுமம் விவகாரம் குறித்து பாஜக அரசு கவனத்தில் கொள்ளாததை கிண்டல் தொனியில் எழுதியுள்ளது. அதில், அதானியின் மோசடிகள் ஹிண்டர்பர்க் அறிக்கை மூலம் வெளிச்சத்திற்கு வந்து உலக நாடுகளின் எதிர்மறை கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆனாலும் இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடியோ, மத்தியில் ஆளும் பாஜக அரசோ அசைந்து கொடுக்க மாட்டோம் என்றிருக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
அதானியின் மோசடிகள் முறைகேடுகள் குறித்து, யாரும் பேசினால் கூச்சப்படுகிறார்கள், குன்றிப்போகிறார்கள்; ஆட்சி அதிகாரத்தைக் கையில் வைத்துக் கொண்டு, அதை அகற்றலாமா, அடக்கி வைக்கலாமா என்றெல்லாம் யோசிக்கிறார்கள்.
இப்படிச் செய்வதால், அதானிப் பிரச்சினை, கொள்ளிவாய்ப் பிசாசாகக் குன்றத்தில் ஏறி நின்று கூச்சல் போடுகிறது; அந்தப் பேரிரைச்சல் இந்தியா முழுவதும் எதிரொலிக்கிறது.
ஒன்று மட்டும் உறுதி; அன்று ‘போஃபர்ஸ் பீரங்கி’, ராஜீவ் காந்தியைத் தோற்கடித்தது; ‘அதானிப் பிசாசு’ 2024 தேர்தலில் மோடி மற்றும் பா.ஜ.க.வை படு மோசமாக வீழ்த்தும்! என்று கூறப்பட்டுள்ளது.