சீமானுக்கு எதிரான புகாரை வாபஸ் பெற்ற நடிகை விஜயலட்சுமி, அவரை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011 ஆம் ஆண்டு வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் நடவடிக்கை வேண்டாம் என தெரிவித்து விட்டு சென்ற நிலையில் கடந்த மாதம் மீண்டும் அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் வளசரவாக்கம் போலீசார் நடிகை விஜயலட்சுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து திருவள்ளூர் மகிளா நீதிமன்றம் மாஜிஸ்திரேட் முன்பு வாக்குமூலம் பெறப்பட்டு நடிகை விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சீமானுக்கு சம்மன் அளித்த நிலையில் வரும் 18ஆம் தேதி சீமான் ஆஜராவதாக தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் வீரலட்சுமி சீமானுக்கு எதிராக வீடியோ ஒன்றை பதிவிட்ட நிலையில் வீரலட்சுமிக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை விஜயலட்சுமி நேற்று முன் தினம் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு வளசரவாக்கம் போலீஸ் நிலையத்திற்கு தனது வழக்கறிஞர்களுடன் சென்ற நடிகை விஜயலட்சுமி, சீமான் மீதான புகாரை வாபஸ் பெறுவதாக கூறி வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் எழுத்துப்பூர்வமான கடிதத்தை அளித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது :
சென்னையில் இருந்தும் தூரத்தில் தான் என்னை போலீசார் வைத்திருந்தனர். வீரலட்சுமிக்கு தெரிந்த இடம் என்பதால் அங்கு வைத்திருந்தனர். கடந்த சில தினங்களாக வீரலட்சுமி ஒரு வழியில் செல்கிறார் என்னை ஒரு வழியில் எடுத்து செல்கிறார்
நேற்று இரவு முதல் அந்த இடத்தில் இருந்து என்னை வெளியே போக வைத்துவிட்டார். உணவையும் நிறுத்திவிட்டார். சொல்ல முடியாத அதிகமான கொடுமைகள் நடந்தது. இந்த வழக்கை வாபஸ் பெற்றுவிட்டு பெங்களூர் செல்கிறேன். யாருடைய வற்புறுத்தலினாலும் வாபஸ் பெறவில்லை. சீமானிடம் பேசினேன். வழக்கை வாபஸ் பெற்று விட்டேன்.
வழக்கை தொடர்வது சென்னைக்கு வருவது இனி இல்லை. இந்த வழக்கில் எதிர்பார்த்த அளவுக்கு திருப்தி இல்லை. போலீசாரின் நடவடிக்கை மெதுவாக இருந்தது. 20 சம்மன் அனுப்பினாலும் ஒன்றும் செய்ய முடியாது என சீமான் கூறிவிட்டார்
இரண்டு வாரமாக வீட்டு காவலில் இருந்தது போல் இருந்தேன். செல்போன் கூட இல்லை. சீமான் சூப்பர். அவருக்கு தமிழ்நாட்டில் முழு பவர் உள்ளது. அவர் முன்பு யாரும் ஒன்றும் செய்ய முடியாது. எனது தோல்வி ஒத்துக் கொண்டு செல்கிறேன். திமுக விளையாட்டு எனக்கு தெரியாது சீமான் புல் பவராக உள்ளார். சீமானை தற்போது ஒன்றும் செய்ய முடியாது.
நான் சீமானிடம் காசு வாங்கவில்லை. சீமானின் குரல் தான் தமிழகத்தில் ஓங்கி ஒலிக்கிறது அது ஒலித்து கொண்டே இருக்கட்டும். சீமானை விசாரணைக்கு கொண்டு வர முடியவில்லை. அவர் பவராக உள்ளார் என தெரிவித்தார். விசாரணைக்கு சீமான் ஆஜராக இருந்த நிலையில் நடிகை விஜயலட்சுமி சீமான் மீதான வழக்கை வாபஸ் பெற்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.







