பார்த்தேன் ரசித்தேன், பிதாமகன், படங்களைத் தொடர்ந்து 22 வருடங்களுக்கு பிறகு மீண்டும் திரையில் சிம்ரன், லைலா கூட்டணி இணைந்துள்ளது.
தமிழ் திரையுலகில் கோலோச்சிய நடிகைகள் சிம்ரன், லைலா இருவரும் மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் ஒரே படத்தில், திரையில் இணைந்து தோன்றவுள்ளார்கள். லைலா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘சப்தம்’ படத்தில் தற்போது நடிகை சிம்ரனும் இணைந்துள்ளார்.
ஈரம் படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குநர் அறிவழகன் மற்றும் நடிகர் ஆதி மற்றும் தமன் வெற்றிக்கூட்டணியில் உருவாகும் “சப்தம்” படத்தில் நடிகை சிம்ரன் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இதையும் படிக்க: மார்ச் 20-ல் வெளியாகிறது பொன்னியின் செல்வன்-2 முதல் பாடல்
முன்னதாக இப்படத்தில் நாயகியாக, நடிகை லக்ஷ்மி மேனன் இணைந்தார். அதற்கடுத்து முக்கியமான பாத்திரத்தில் நடிக்க, நடிகை லைலா இணைந்த நிலையில் தற்போது நடிகை சிம்ரன் இணைந்திருப்பது, ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது. லைலாவும், சிம்ரனும் முன்னதாக பார்த்தேன் ரசித்தேன், பிதாமகன் படங்களில் இணைந்து நடித்திருந்தனர். இந்நிலையில், மீண்டும் இந்தக் கூட்டணியை திரையில் காண ரசிகர்கள் இப்போதே ஆவலுடன் காத்திருக்க ஆரம்பித்துவிட்டனர்.
தமிழ் சினிமாவின் தொடர் காமெடி ஹாரர் படங்களிலிருந்து ரசிகர்கள் இளைப்பாறும் வகையில், ஒரு இனிமையான மாற்றமாக இதயத்தை அதிரவைக்கும் ஹாரர் திரில்லராக இப்படம் உருவாகிறது. ஈரம் படத்தின் வெற்றிக்கூட்டணிக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இப்படத்தை எழுதி இயக்குவதுடன் தயாரிப்பாளராகவும் தன் புதிய பயணத்தை துவங்கியுள்ள இயக்குநர் அறிவழகன் Aalpha Frames நிறுவனம் சார்பில், 7G Films நிறுவனத்தின் தயாரிப்பாளர் சிவா உடன் இணைந்து, இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது.
-ம.பவித்ரா








