#HemaCommitteeReport | நடிகை ராதிகாவிடம் கேரள சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் விசாரணை!

நடிகை ராதிகாவிடம் கேரள சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் தொலைபேசி வாயிலாக விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரள திரையுலகமே ஹேமா கமிட்டி அறிக்கையால் அரண்டு போயிருக்கிறது. பிரபல நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மீது…

நடிகை ராதிகாவிடம் கேரள சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் தொலைபேசி வாயிலாக விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேரள திரையுலகமே ஹேமா கமிட்டி அறிக்கையால் அரண்டு போயிருக்கிறது. பிரபல நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மீது அடுக்கடுக்கான பாலியல் புகார்களை நடிகைகள் உள்ளிட்ட பெண் கலைஞர்கள் சுமத்தி வருகின்றனர். மலையாள திரையுலகையே விழி பிதுங்க வைத்துள்ள இந்த விவகாரம் அம்மாநில அரசுக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது.

குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பேற்று மோகன்லால், உள்ளிட்ட பிரபல நடிகர்கள் திரைப்பட சங்க பதவிகளில் இருந்து ராஜிநாமா செய்தனர். நடிகர்கள் சித்திக், முகேஷ், ஜெயசூர்யா, மணியன்பிள்ளை ராஜூ உள்ளிட்டோர் மீது வழக்கும் பதிவாகி இருக்கிறது.

இந்நிலையில் பிரபல நடிகை ராதிகா சரத்குமார் அளித்த பேட்டியில், ”கேரளாவில் படப்பிடிப்பின் போது வழங்கப்பட்டு உள்ள கேரவனில் ரகசியமாக கேமராக்களை பொருத்தி நடிகைகள் ஆடைகளின்றி காட்சி அளிக்கும் வீடியோக்களை பதிவு செய்கின்றனர். பின்னர் அந்த வீடியோக்களை அங்கே படப்பிடிப்பில் இருக்கும் நடிகர்கள் ஒன்றாக அமர்ந்து தங்களது செல்போனில் பார்த்து ரசித்துள்ளனர்.

இதுபோன்ற சம்பவங்களை பலமுறை நானே நேரில் கண்டுள்ளேன். அதனால் தான் பயந்து போய் ஓட்டலில் அறை எடுத்து, அங்கே சென்று நான் உடை மாற்றிக் கொண்டு படப்பிடிப்புத்தளத்துக்கு வருவேன். அதன் பின்னர், நானே பலமுறை எனக்கு தெரிந்த நடிகைகளிடம் கேரவன் உள்ளே போய் வரும் போது கவனமாக போகுமாறு கூறி இருக்கிறேன். படப்பிடிப்பின் போது நிறைய நடிகைகளின் அறைக்கதவுகளை பலர் தட்டுவதை பார்த்து இருக்கிறேன். பல பெண்கள் இதுபோன்ற தொந்தரவுகளை தாங்காமல் எனது அறைக்கு வந்து உதவி செய்யுமாறு கேட்ட தருணங்களும் உண்டு” எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

ராதிகாவின் இந்த பகீர் குற்றச்சாட்டுகளால் கேரள திரையுலகம் மீண்டும் அதிர்ச்சிக்குள்ளானது. இந்த நிலையில் ராதிகாவிடம் கேரள சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரிகள் போனில் தொடர்பு கொண்டு விசாரணை நடத்தினர். அதில், தான் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து ராதிகா விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.